தமிழினப் படுகொலை நாள்.. சென்னை மெரினா கடற்கரையில் தலைவர்கள், தமிழின உணர்வாளர்கள் நினைவஞ்சலி....
சென்னை: இலங்கையில் 2009ம் ஆண்டு லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூரும் வகையில் மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், தமிழின உணர்வாளர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 6-ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தை மே 17 இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

மெரீனாவில்
சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே நடைபெற்ற இக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன், நடிகர் நாசர், கவிஞர் காசி ஆனந்தன் உட்பட 500-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மலர் அஞ்சலி
இந்நிகழ்வில் மாணவர் அமைப்பினர் அணிவகுப்பு மரியாதையுடன் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், பத்திரிகையாளரும் சிங்களப் படையினரால் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா ஆகியோரது உருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முழக்கங்கள்
பின்னர் இறுதிகட்ட போரின் போது நடந்த அநீதி குறித்து விசாரணை நடத்த வேண்டும்; பொது வாக்கெடுப்பு மூலம் தனி ஈழத்திற்கு தீர்வு காண வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மணற் சிற்பம்
தமிழினப் படுகொலையை சித்தரிக்கும் வகையில் மெரினா கடற்கரையில் மணற்சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

மக்கள் கூட்டம்
மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. கடற்கரைக்கு வந்தவர்கள் பலரும் இந்த வீரவணக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications