ஆளுக்கு 5 லட்சம் கட்டாயம்.. இது 'கேப்டனோட' ஆர்டராம்!
சென்னை: கட்சியை வரும் லோக்சபா தேர்தலில் கரை சேர்க்க தலா ரூ. 5 லட்சம் வசூலிக்க வேண்டும் என்று அணி வாரியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளாராம்.
இவ்வளவு பணத்தை எங்கே போய் வசூலிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்களாம் தேமுதிக நிர்வாகிகள்.
போகிற போக்கைப் பார்த்தால் இருப்பதையும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்திலும் அவர்கள் மூழ்கியுள்ளனராம்.

மாறி மாறி திமுக அதிமுக
தமிழக அரசியல் களத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக கட்சிகளே முதல்வர் பதவியை மாறிமாறி ஆண்டு அனுபவித்து வருகின்றன. இந்த இருக்கையில் அமர எல்லா அரசியல் கட்சி பிரமுகர்களும் ஆசைப்படுவது வழக்கமானதுதான்.

புதிய நட்சத்திரமாக உதித்த தேமுதிக
தான் நடித்த திரைப்படங்களின் மூலமாக, அரசையும், அரசியலையும் கடுமையாக சாடி வந்த நடிகர் விஜயகாந்த் கடந்த 2005ம் ஆண்டு மதுரையில் தேசிய முற்போக்கு திராவிடக்கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கினார். கட்சி துவங்கியவுடன் இதர அரசியல் கட்சிகளுடன் கூட்டணி எதுவும் வைக்காமல் சட்டமன்றம், பாராளுமன்றம், உள்ளாட்சி தேர்தல் களத்தில் தனித்தே போட்டியிட்டார்.

விருத்தாச்சலத்தில் பிள்ளையார் சுழி
தேர்தல்களில் எல்லாம் தனித்து போட்டியிட்ட தேமுகதிவின் நிர்வாகிகள் யாரும் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை. கட்சி துவங்கிய மறு ஆண்டான 2006ல் நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலின் முடிவில் கட்சியின் நிறுவனரான விஜயகாந்த் மட்டும் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றிபெற்று தனது கட்சியின் வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

பலமான வாக்கு வங்கி
சட்டமன்றம், பாராளுமன்றம், உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை நடந்த அனைத்து இடைத்தேர்களிலும் தேமுதிக தவறாமல் போட்டியிட்டது. விஜயகாந்தின் தனித்துபோட்டி என்ற தாரக மந்திரம் மக்களை வெகுவாக கவர்ந்து தேமுதிகவிற்கென ஒரு பலமான வாக்குவங்கியை நிர்ணயிக்க காரணமாகி விட்டது.

29 இடங்களில் சிறப்பான வெற்றி
இந்த நேரத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக முதன் முதலில் கூட்டணியுடன் கூடிய தேர்தல் போட்டி களத்தில் இறங்கியது. ரிஷிவந்தியம் உட்பட 41தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் களம் இறக்கப்பட, தேமுதிகவினர் 29 தொகுதிகளில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகினர்.

2வது இடத்திற்கு ஓடி வந்தது
தனது தனிப்பட்ட செல்வாக்கால் தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெற்ற தேமுதிக, தனது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் பிரதான அரசியல் கட்சியான திமுகவை பின்னுக்கு தள்ளி அரசியல் களத்தில் 2வது இடத்தை பெற்றது. இந்த இரண்டாவது இடம் தேமுதிகவிற்கு எதிர்பாராதவகையில் தமிழகத்தின் பலமான எதிர்கட்சி என்ற மாபெரும் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.

தன்மானம் முக்கியமாச்சே...
அதிமுக கூட்டணியில் இருந்தபோதும் எதிர்கட்சி என்ற அந்தஸ்தை பெற்ற தேமுதிக தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்கவில்லை. இதன் காரணமாக சட்டமன்றத்தில் அதிமுக அணியினருக்கும், தேமுதிக அணியினருக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் அவ்வப்போது அரங்கேறின.

கண்ணுபட்டுப் போச்சுதய்யா சின்னக் கவுண்டரே...
''கண்ணுபட போகுதய்யா சின்னக்கவுண்டரே'' என்ற விஜயகாந்த் படத்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப யார் கண்பட்டதோ என்னவோ தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர் திடீரென அதிமுகவிற்கு ஆதரவாக மாறினர்.

ஆஸ்டின் போனார்
7 சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறிய நிலையில், விஜயகாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆஸ்டின் திடீரென்று கட்சியில் இருந்து விலகினார். அத்தோடு நிற்காமல் ஆஸ்டின் தனது தாய்க் கழகமான திமுகவில் மீண்டும் இணைந்து விட்டார்.

சுந்தரராஜனும் போய் விட்டார்
தென் தமிழகத்தை பொறுத்தவரை விஜயகாந்தின் பெரும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்த மதுரை சுந்தர்ராஜன், விருதுநகர் மாபா.பாண்டியராஜன், ராதாபுரம் மைக்கேல்ராயப்பன் சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையில் ஆஸ்டினும் வெளியேறி இருப்பது தேமுதிகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

லோக்சபா தேர்தலில் பிடிச்சுடுவோம்
இந்நிலையில், தென்தமிழகத்தில் தனது இழந்த செல்வாக்கை மீட்டிட, தொண்டர்கள் மத்தியில் தளராத உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிவாகை சூடிட விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

வசூலிச்சேயாக வேண்டும்
தேர்தலுக்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ள விஜயகாந்த் மாவட்ட செயலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், கட்சியின் பிறஅணிகளின் முக்கிய நிர்வாகிகளுக்கு விதித்துள்ள கட்டாய வசூல் கட்டளையால் நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மா.செக்களுக்கு தலா ரூ. 5 லட்சம் டார்கெட்
அதாவது, ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் கட்சிக்காக குறைந்தது 5லட்ச ரூபாய் வசூல் செய்து கொடுக்க வேண்டுமாம். இதுபோன்ற பிற அணிகளின் நிர்வாகிகள் குறைந்தது 50ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் வசூல் செய்யவேண்டுமாம். இதற்கான கட்சியின் நன்கொடை ரசீதுகள் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் சென்னைக்கு வரவழைத்து கட்டாய உத்தரவு பிறப்பித்து வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணத்தில் பார்த்தா
இதோடு நிற்காமல் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எம்.எல்.ஏ., தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வசூல் வேட்டையை திறம்பட மேற்கொள்ளுங்கள் என்று கண்டிப்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

எதையாவது பேசி விடுகிறாரே கேப்டன்
அதிமுகவில் இருந்தபோது கூட எதிர்கட்சி என்ற அந்தஸ்து இருந்தது. இது பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் தனியார் தொழில்நிறுவனத்தினர் மத்தியில் நல்ல செல்வாக்கை கொடுத்திருந்தது. தற்போது எதிர்கட்சி அந்தஸ்து இல்லை. இதனால் யாரும் தேமுதிகவை மதிப்பதும் இல்லை. அதுமட்டுமா அவ்வப்போது கேப்டன் என்ன பேசுவது என்பது தெரியாமல் பேசி விடுகிறார்.

எங்க போவது
ஆர்ப்பாட்டம், போராட்டம் என கட்சி நிகழ்ச்சிகளுக்குகூட கூட்டம் சேர்ப்பதே பெரும் பாடாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் 5 லட்சத்திற்கு எங்கே போவது என்று மாவட்ட செயலாளர்கள் விக்கித்து போய் விரக்தி அடைந்துள்ளனராம்.

தப்புத் தப்பான பேச்சுக்கள்
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியை மாவட்டங்களை மையமாக கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

ஜாதிப் பிரச்சினையாக்கிய பேச்சு
கட்சியின் வளர்ச்சி குறித்தும், எதிர்கால தேர்தல் திட்டப்பணிகள் குறித்தும் பேசுவதற்கு பதிலாக தாதுமணல் ஆலை அதிபர் வைகுண்டராஜனை தாறுமாறாக பேசினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடார் அமைப்புகள் விஜயகாந்தின் உருவபொம்மையை எரித்ததுடன், ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டனர். இதனால் தேவையில்லாத குழப்பம் உருவானது.

போர்டுக்கே வழியில்லை...
இந்த பொதுக்கூட்டத்திற்கான செலவு கணக்கே இன்னும் முடிக்கப்படாத சூழலில் 5லட்சம் வசூலிக்கவேண்டும் என்ற கேப்டனின் உத்தரவு தென் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஒன்றுக்கும் வழியில்லாமல், ஏன் தொழிற்சங்க பெயர் பலகை கூட வைக்கமுடியாமல் உட்கார்ந்திருக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள் குறைந்தது 50 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்ற உத்தரவு அவர்களை அலறவைத்துள்ளது.

இருப்பதையும் உருவிட்டு விட்ருவாரோ...
கட்சியில் ஏதாவது பதவி வேண்டும் என்று போட்டி போட்டு பணத்தை செலவழித்து பதவி வாங்கிய நிர்வாகிகள் பதவி கிடைத்தால் ஏதாவது சம்பாதிக்கலாம் என்று பார்த்தால், இங்கே இருக்கிறதையும் உருவிட்டு விட்டுருவாங்க போல என்ற அச்சத்தில் விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

நல்லா யோசிச்சு.. எஸ்கேப்பாயிருவோம்
''மத்திய அரசை நிர்மானிப்போம், மாநில அரசை வென்றெடுப்போம்'' என்று கூறிவரும் கேப்டன் அவ்வப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் கட்டாயமாக இவ்வளவு தரவேண்டும், அவ்வளவு தரவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டு வருவது ''நல்லா யோசிச்சு முடிவெடுத்து எஸ்கேப்பாகிடுவோம்'' என்ற ரீதியில் கட்சியினரை புலம்ப வைத்துள்ளது.

வசூல்மட்டும் போதுமா...
கட்சியின் வளர்ச்சிக்கு வசூல் மட்டும் போதாது, நல்ல உண்மையான, அதுக்கு, இதுக்கு ஆசைப்பட்டு அணி மாறாத நிர்வாகிகளும், கட்சியினை அடகு வைக்க முன்வராத நிர்வாகிகளும், தொண்டர்களும் வேண்டும் என்பதை இனியாவது கேப்டன் உணர்ந்தால் சரிதான் என்பதே தேமுதிக தொண்டர்களின் கருத்தாகும்.
வசூல் இலக்கை குறிவைத்து பயணிக்கும் கேப்டனின் தேமுதிக கப்பல் அரசியல் களத்தில் கரையேறுமா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...












Click it and Unblock the Notifications