குமுதம் வரதராஜனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
சென்னை: குமுதம் பத்திரிகை வெளியீட்டாளர் என் வரதராஜனுக்கு எதிரான வழக்கு ஆதாரமில்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது சென்னை பெருநகர தலைமை நடுவர் நீதிமன்றம்.
குமுதம் பத்திரிகையின் அதிகபட்ச பங்குதாரர் மற்றும் இயக்குநருமான ஏ.ஜவஹர் பழனியப்பன் 2010-ஆம் ஆண்டு போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அதில், "1947-ஆம் ஆண்டு எனது தந்தை எஸ்.ஏ.பி. அண்ணாமலையால் தொடங்கப்பட்ட வாரப் பத்திரிகையை நான் நடத்தி வருகிறேன். பத்திரிகை தொடங்கப்பட்ட போது பி.வி.பார்த்தசாரதி என்பவர் எனது தந்தையுடன் மேலாளராக பணிபுரிந்தார்.
பிறகு அவர் வெளியீட்டாளராக பதவி உயர்த்தப்பட்டார். பார்த்தசாரதி இறந்த பிறகு, அவரது மகன் பி.வரதராஜன், தனது குடும்பத்துக்கு சில பங்குகள் ஒதுக்க வேண்டும் என என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அவருக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவ்வாறு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கான மதிப்பை வரதராஜன் இப்போது வரை செலுத்தவில்லை.
பிறகு, குமுதம் பத்திரிகை அலுவலகத்துக்கு நான் வராத நிலையில், அனைத்து பொறுப்புகளையும் நிர்வகிப்பதற்கான வாய்ப்பு வரதராஜனுக்குக் கிடைத்தது. அப்போது, நிர்வாகத்தில் இருந்த வரதராஜன் மோசடியில் ஈடுபட்டார். அலுவலக நிதி ரூ. 25 கோடியை தவறாகப் பயன்படுத்தினார்," என்று புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில் வரதராஜன் மீது மோசடி மற்றும் ஏமாற்றுதல் பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வரதராஜனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதன் பிறகு சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஏ.ஜவஹர் பழனியப்பன் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி சரியான முறையில் ஆய்வு செய்யவில்லை. 2011-ஆம் ஆண்டு என்னிடமும் எனது குடும்பத்தினரிடமும் விசாரணை செய்தார். அதன் பிறகு, புகாரில் உண்மை இல்லை எனக் கூறி வழக்கை திடீரென முடித்துவிட்டார். விசாரணையை சரியான முறையில் நடத்தவில்லை. அதனால், விசாரணை அதிகாரியின் இறுதி ஆய்வறிக்கையை நிராகரிக்க வேண்டும்," என கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "நிறுவனத்தின் பணம் ரூ. 25 கோடியை தவறாக பயன்படுத்தியதாகவும், ஏமாற்றியதாகவும் வரதராஜனுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை.
புகாருக்குத் தேவையான அனுமதிக்கக் கூடிய ஆதாரங்கள், ஆவணங்கள் ஏதும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால் வரதராஜனுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது," என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications