கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிடுவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக, வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் மோசடி செய்து மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தற்போது, மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருவதால், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று கடந்த மாதம் 21ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
எனவே, என்னுடைய கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.