926 மார்க் வாங்கியும் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் மாணவன்!
செங்கோட்டை: பிளஸ்டூவில் 926 மார்க் வாங்கியும் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கிறார் ஒரு ஏழை மாணவர்.
ஒருமாணவன் நல்ல மதிப்பெண் பெற்றும் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் நிலை இருந்தால் ஓன்று பணமில்லாமல் வறுமையின் கொடுமையால் மட்டுமே இருக்க முடியும். ஆனால் இந்த இனத்தில் பிறந்து அந்த இனத்தினை சார்ந்தவர் இவர் என்று அடையாளப்படுத்தும் ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் ஒரு இனமே கல்வியறிவை மேம்படுத்த முடியாமல் இளமை திருமணத்தை நாடி செல்வதும் சாலைகளில் கிடக்கும் குப்பைகளையும், கழிவுகளையும் பொறுக்கி ஜீவனத்தை கழிக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டு சாக்கடைக்கருகே குடியிருக்கும் வேதனைக்கும் அவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

தென்காசி அருகேயிருக்கும் செங்கோட்டை பகுதியில் சுமார் 75 ஆண்டுகாலமாக வசித்து வருபவர்கள் "காட்டுநாயக்கன்" சமுதாயத்தினர். இம்மக்களுக்கு குடியிருக்க வீடு கிடையாது. ஆனால் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உண்டு. ஆனால் ஜாதி சான்று கிடையாது.
இந்த சமுதாய மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தாலும் இந்த சமுதாய குழந்தைகள் 10ஆம் வகுப்புக்கு மேல் படித்தாலும் வீண். காரணம் ஜாதி சான்று இவர்களுக்கு அரசால் வழங்கப்படுவதில்லை. இது குறித்து இம்மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தும், அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும், சென்னையில் ஊர்வலமாக சென்று மனுக் கொடுத்தும் இன்றுவரை இவர்களுக்கு ஜாதி சான்று கிடைத்தப்பாடில்லை.
இந்தாண்டு நடந்த பனிரெண்டாம் வகுப்புத்தேர்வில் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் மாணவன் சுடலை என்பவர் 926 மதிப்பெண்கள் பெற்றும் ஜாதி சான்று இல்லாததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவித்து வருகிறார். இவரது கல்வி குரல் அரசின் செவிகளுக்கு எட்டுமா.. ?












Click it and Unblock the Notifications