காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா.. அடுத்து என்ன செய்யும் சுப்ரீம்கோர்ட்?
சென்னை: காவிரியில் தண்ணீரை நிறுத்த முடிவு செய்துள்ள கர்நாடக அரசை கலைக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட முடியுமா, கர்நாடக அரசின் முடிவு நீதிமன்ற அவமதிப்புதானா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் சிலரிடம் கருத்து கேட்டிருந்தது 'ஒன்இந்தியா'. அவர்கள் கூறியதன் சாராம்சம் என்பது இதுதான்:
கர்நாடகா அவசரமாக சட்டசபையை கூட்டி காவிரி பிரச்சினை பற்றி விவாதிக்க உள்ளதாகவும், அதுவரை கர்நாடக காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் என்றும் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

தீர்மானம் நிறைவேற வாய்ப்பு
சிறப்பு சட்டசபை கூட்டத்தின்போது, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்மானத்தை எதிர்த்து ஏக மனதாக ஒரு தீர்மானத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றிட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீர்மானமே ஆயுதம்
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, "சட்டசபை இவ்வாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. எனவே, சட்டசபை தீர்மானத்திற்கு எதிராக அரசால் செயல்பட முடியாது" என்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வாதம் செய்ய வாய்ப்புள்ளது.அதற்கான வாய்ப்பும் சட்டத்தில் உள்ளது.

சுப்ரீம் கோர்ட் அதிகாரம்
ஆனால், சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் உள்நோக்கம் கொண்டது என்று உச்சநீதிமன்றம் கருதினால், அந்த தீர்மானத்தை டிஸ்மிஸ் செய்யவும் அதற்கு அதிகாரம் உள்ளது. அரசியலமைப்புக்கு எதிரான ஒரு தீர்மானம் என்று கூறி அந்த தீர்மானத்தை தள்ளுபடி செய்துவிடலாம். தங்கள் தீர்ப்பே அனைத்திலும் உயர்வானது என்று இதற்கு முன்பு, இதேபோன்ற சில பிரச்சினைகளில் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

ஆட்சியை கலைக்க உத்தரவு
மேலும், கோர்ட்டின் உத்தரவை மீறி வேண்டுமென்றே அவமதிப்பு செய்ததாக கூறி அரசியலமைப்பு சட்டம் 356-ஐ பிரயோகித்து கர்நாடக அரசை கலைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யலாம். அதன்பிறகு மத்திய அரசு, சுப்ரீம்கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

மத்திய அரசும்
கர்நாடக அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தியிருந்தால், மத்திய அரசும்கூட தானாக முன்வந்து அந்த அரசை கலைக்க முடியும். ஒருவேளை இதை எதிர்த்து வழக்கு தொடரவேண்டும் என்றாலும், அதே உச்சநீதிமன்றத்தைதான் கர்நாடக அரசு அணுக வேண்டும். மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்தவே உச்சநீதிமன்றம் சொல்லும் வாய்ப்பு அதிகம். இவ்வாறு சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications