காவிரி பிரச்சினை: நடிகர் நடிகைகள் போராட்டம்? சங்க செயற்குழுவில் இன்று ஆலோசனை
சென்னை: காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழ் நடிகர்கள் சங்க செயற்குழுவில் இன்று ஆலோசிக்கப்படுகிறது. அப்போது இப்பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட நடிகர், நடிகைகள் நேற்று முன்தினம் பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிவராஜ்குமார், உபேந்திரா உள்பட பல்வேறு கன்னட நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு தமிழகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

இது தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காவிரி நீர் தர எதிர்ப்பு தெரிவித்த கன்னட திரையுலகினருக்கு தமிழ் திரையுலகினர் தங்களது எதிர்ப்பை காட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 11வது மாதாந்திர செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் நடக்கிறது. அப்போது நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் காவிரி நீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட திரையுலகினர் போராட்டம் நடத்தியது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
தமிழ் நடிகர், நடிகைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதா? உண்ணாவிரதம் இருப்பதா? அல்லது வேறு வகையில் எதிர்ப்பை தெரிவிப்பதா என்பதை பற்றி விவாதித்து முடிவு செய்கின்றனர். நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். தற்போது விஷால் கத்திசண்டை பட படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாடு சென்றிருக்கிறார். நாளை அவர் சென்னை திரும்பி சங்க செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications