காவிரி பந்த் : எதிர்கட்சியினர் மறியல்... ஸ்தம்பித்த தலைநகரம் - கடும் அவதியடைந்த மக்கள்
எதிர்கட்சியினர் நடத்திய பந்த், மறியல் காரணமாக தமிழக தலைநகரமே ஸ்தம்பித்தது. மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அழுத்தம் கொடுக்காத மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று எதிர்கட்சியினர் நடத்திய பந்த், மறியல் காரணமாக சென்னை ஸ்தம்பித்தது. மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார கால அவகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். கடைசி நாளில் ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்ததோடு 3 மாத காலம் அவகாசமும் கேட்டது
இதனையடுத்து தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன. எதிர்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சென்னையில் பந்த்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. முழு அடைப்பு காரணமாக சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காய்கறி கடைகள் டீ கடைகள் அடைக்கப்பட்டன பெட்டிக்கடைகள் கூட திறக்கப்படாத காரணத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மாலையில் கடைகள் திறக்கப்பட்ட பின்னர் இயல்பு நிலை திரும்பியது.

திடீர் மறியல்
மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்தது. சென்னை முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆங்காங்கே சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தன. இதனால் தமிழகம் போராட்டக்களமாக மாறியதால் பதற்றமான சூழ்நிலை உருவானது.

ஸ்தம்பித்த அண்ணாசாலை
மத்திய அரசை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் திமுக செயல் தலைவர் மு. க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். திருநாவுக்கரசர், திருமாவளவன், கி. வீரமணி ,ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவருடன் திமுக, விடுதலை சிறுத்தைகள் , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாசாலை ஸ்தம்பித்தது.

மக்கள் சிரமம்
பொதுத்தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில் எதிர்கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது பெற்றோர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே போல பல வணிகர்களும் அரைமனதோடுதான் கடைகளை அடைத்தனர். ஏனெனில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் கடையடைப்பு நடைபெற்றது. இன்று அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கடும் சிரமத்திற்கு இடையேதான் அலுவலகங்களுக்கு சென்றனர்.

சென்னையில் போலீஸ் குவிப்பு
முழு அடைப்பு நடைபெறுவதை முன்னிட்டு ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடைபெறும் இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக, கர்நாடக எல்லையில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications