தலைக்காவிரியில் பிறந்து.. தாய் வீட்டோடு தடுக்கப்படும் காவிரி.. தவித்து மருகும் தமிழகம்!
சென்னை: காவிரி நீர் பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக கர்நாடகாவிலும், தமிழகத்திலும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கன்னட அமைப்புகள் வன்முறை போராட்டங்கள் நடத்தின. இதனால் இருமாநில போக்குவரத்தும் தொடர்ந்து சீரற்றுக் காணப்படுகிறது.
இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு காரணமான காவிரி ஆற்றின் பிறப்பிடம் மற்றும் கிளை ஆறுகள் என அதன் வரலாற்றைக் கொஞ்சம் திருப்பிப் பார்க்கலாமா...
காவிரி ஆறு என்பது இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் உற்பத்தி ஆகிறது.

காவிரி படுகை...
காவிரி படுகையின் நீளம் 81,155ச.கிமீ ஆகும். அதாவது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் இது 2.7 சதவீதம் ஆகும். இதில் கர்நாடகாவில் 34,273 ச.கிமீ-ம் , தமிழகத்தில் 43856 ச.கிமீ-ம், கேரளாவில் 2866 ச.கிமீ-ம், புதுச்சேரியில் 160 ச.கிமீ-ம் என நான்கு மாநிலங்களிலும் பிரிந்து காணப்படுகிறது.

பாயும் பகுதிகள்...
கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து வரும் காவிரி ஆறு, தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

பயணம் செய்யும் தூரம்...
காவிரி ஆறு தலைக்காவிரியில் உற்பத்தியாகி, கடலில் கலப்பதற்கு இடைப்பட்ட தூரத்தில் சுமார் 800 கிமீ பயணம் செய்கிறது. இதில், 320 கிமீ கர்நாடகத்திலும், 416 கிமீ தமிழகத்திலும், 64 கிமீ கேரளத்திலும் உள்ளது. காவிரிப் படுகை கர்நாடகத்தில் மின்விசிறி போன்ற தோற்றத்திலும், தமிழகத்தில் இலை போன்ற தோற்றத்திலும் காணப்படுகிறது. இந்த வடிவமைப்பின் காரணமாக காவிரி நீரானது அதிக வெள்ளப்பெருக்கு அல்லது சீக்கிரம் வற்றி விடும் சூழல் போன்றவற்றை உருவாக்குவது இல்லை.

நீர் பெறும் காலம்...
இந்த படுகையானது கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையின் போது அதிக நீரையும், வடகிழக்கு பருவமழையின் போது ஒரு பகுதி நீரையும் பெற்று வருகிறது. இதேபோல் தமிழக படுகையானது வடகிழக்கு பருவமழையின் போது அதிக நீரைப் பெறுகிறது.

இரு ஆறுகளாக பிரிகிறது...
தமிழகத்தில் திருச்சியை கடக்கும் போது காவிரி ஆறு இரண்டு பாகங்களாகப் பிரிகிறது. அதில் வடக்கு கிளை கொள்ளிடம் என்றும், தெற்கு கிளை காவிரி என்ற பெயரிலும் பாய்கிறது. ஆனால் இந்த இரண்டு ஆறுகளும் 16 கிமீ பயணம் செய்து மீண்டும் ஸ்ரீரங்கத்தில் இணைகிறது.

துணை ஆறுகள்...
கபினி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும். இதேபோல் பவானி, அமராவதி, நொய்யல் ஆகியன தமிழக பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.












Click it and Unblock the Notifications