காவிரி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார் ஜெயலலிதா- ராமமோகனராவ்
காவிரி விவகாரம் தொடர்பாக 2016 செப்டம்பர் 27ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக ராம மோகனராவ் கூறியுள்ளார்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா 2016 செப்டம்பர் 27ஆம் தேதியன்று
காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலாவுக்கு எதிராக சிலர் சாட்சியம் அளித்திருந்தனர். அது குறித்து சசிகலா பதில் அளிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தோர் மற்றும் அவர்கள் அளித்த சாட்சி விவரங்களை அளிக்க வேண்டும். அந்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அதன் பின்னரே, சசிகலா பதில் அளிக்க முடியும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர், விசாரணை ஆணையத்தில் தெரிவித்திருந்தார்.
சாட்சி விவரங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் வழங்கியது. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த மாதம் 28ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா ஆகியோரிடம் சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.
இதனையடுத்து குறுக்கு விசாரணையில் பங்கேற்க மேலும் 11 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று மருத்துவர்கள் ஆர்.முத்துசெல்வம், பி.கலா, பிரிட்டோ, பி.தர்மராஜன், பி.பாலாஜி, எம்.என். சங்கர் ஆகிய 6 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இன்று ஜெ.தீபக், மருத்துவர்கள் எம்.கே. முரளிதரன், எஸ்.தினேஷ் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன், ஐஏஎஸ் அதிகாரி ராம மோகனராவ் ஆகிய 5 பேர் ஆஜராக சம்மன் அனுப்பட்டது. சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.
விசாரணை ஆணையத்தில் ஆஜராக ராம மோகன் ராவ், செய்தியாளர்களிடம் பேசினர். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா 2016 செப்டம்பர் 27ஆம் தேதியன்று காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டம் மருத்துவமனையில் இரண்டு மணிநேரம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் ஓபிஎஸ், இபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, சி.விஜயபாஸ்கர், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்று கூறிய ராம மோகன் ராவ், சசிகலா தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணைக்கு பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications