பொட்டு சுரேஷ் கொலை: அட்டாக் பாண்டி வீடுகளில் சிபிசிஐடி போலீஸ் சோதனை
சென்னை: திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய அட்டாக் பாண்டி வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் சிபிசிஐடி போலீசார் பலமணி நேரம் சோதனை கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தவர் சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ். இவர் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மதுரை டி.வி.எஸ். நகர் அருகில் உள்ள சத்யசாய் நகரில் தனது வீட்டுக்கு காரில் வந்தபோது மர்ம கும்பலால் வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவர் அட்டாக் பாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவரவே அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். ஏராளமானோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எனினும் அட்டாக் பாண்டியை நெருங்க முடியவில்லை.
மும்பையில் அட்டாக் கைது
அட்டாக் பாண்டி தலைமறைவாகவே, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர்,
மும்பையில் பதுங்கி இருந்த அட்டாக் பாண்டியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொலை சம்பவம் நடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி விசரணை
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் மேலும் பல்வேறு ஆவணங்களை திரட்டும் வகையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கின் ஆதாரம் மற்றும் ஆவணங்களை திரட்டும் பணியில் சிபிசிஐடி போலீசார் இறங்கினர்.
அட்டாக் பாண்டி வீடுகளில் சோதனை
சிபிசிஐடி போலீஸ் துணை கண்காணிப்பாளர் மன்மதபாண்டியன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று காலை 6 மணிக்கு மதுரை கீரைத்துறையில் உள்ள அட்டாக் பாண்டியின் வீட்டிற்கு வந்தனர். அங்கிருந்த அவரது தாயாரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். வீடு முழுவதும் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார் அட்டாக் பாண்டியின் பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களை திரட்டினர்.
உறவினர் வீடுகளில் சோதனை
அட்டாக்பாண்டி அக்காள் வேலம்மாள், தங்கை கலா, மாமனார், அண்ணன் இருளாண்டி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மதுரை கீரைத்துறை மற்றும் வில்லாபுரத்தில் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி. மன்மதபாண்டியன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சிபிசிஐடி குழு, அட்டாக் பாண்டி வீடுகள் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications