மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம்: நிர்மலாதேவி மீது முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பேராசிரியை நிர்மலாதேவி மீது விருதுநகர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்: பேராசிரியை நிர்மலாதேவி மீது விருதுநகர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான தொலைபேசி ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் குழு அமைத்து உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட குரல் பரிசோதனையில் தொலைபேசி ஆடியோவில் இருப்பது பேராசிரியை நிர்மலாதேவியின் குரல்தான் என உறுதியானது.
இதைத்தொடர்ந்து ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியுடன் பேராசிரியைக்கு தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து நிர்மலா தேவி வழக்கில் 6 மாதத்தில் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி மீது விருதுநகர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1160 பக்க குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நிர்மலா தேவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபச்சாரத் தடுப்புச் சட்டம் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய சட்டத்தின் கீழும் நிர்மலா தேவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.