சி.டி.யில் பதியப்பட்ட 1200 போட்டோக்கள் - காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய சி.பி.சி.ஐ.டி முயற்சி
சென்னை: தமிழகத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய புதிய யுக்தியாக அவர்களது விவரங்களை சிடியில் பதிவு செய்து மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி சி.பி.சி.ஐ.டி போலீசார் தேடுதலைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் காணாமல்போன குழந்தைகளைக் கண்டறியும் முயற்சியாக, தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காணாமல் போன குழந்தைகளின் புகைப்படம் மற்றும் விவரங்களை சி.டி.யில் பதிந்து பிற மாநில டி.ஐ.ஜி.களுக்கு அனுப்பியுள்ளனர்.
சமீபத்தில் தேசிய மனித உரிமை ஆணையம், தமிழகத்தில் குழந்தைகள் அதிகளவில் காணாமல் போவதுகுறித்து தமிழக டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியது.
குழந்தைகள் குறித்த தகவல்கள்:
தமிழக சி.பி.சி.ஐ.டி. காவல் துறைக்கும் சென்னை நகர காவல் துறைக்கும் இடையே சரியான ஒருங்கிணைவு இல்லாததால், சமீபத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்து தகவல்கள் எதுவும் இரு துறைக்குமிடையே பரிமாறிக்கொள்ளப்படவில்லை.
சிபிசிஐடியே பொறுப்பு:
தமிழ்நாட்டில் சி.பி.சி.ஐ.டி துறையே குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கும், இதர போலீஸ் பிரிவுகள் மேற்கொள்ளும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளின் விசாரணை கண்காணிப்புக்கும் பொறுப்பான துறை.
1200 குழந்தைகள்:
தேசிய மனித உரிமை ஆணையத்தின் நோட்டீஸையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களிலுள்ள, பெற்றோர் யாரெனத் தெரியாத 1200 குழந்தைகளின் புகைப்படங்களை சேகரித்துள்ளனர்.
பிற மாநில காவல்துறைக்கு:
அதுபோல் தமிழகத்தில் காணாமல்போன குழந்தைகளின் புகைப்படங்களும் விவரங்களும் தனி சி.டியில் பதியப்பட்டு பிற மாநில காவல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பெற்றோரிடம் சேர்க்கத் திட்டம்:
அம்மாநிலங்களில் காணாமல்போன குழந்தைகள் எதுவும் இந்த இல்லங்களில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தால், குழந்தைகளை அவர்கள்மூலம் அவர்களது பெற்றோரிடம் சேர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.
தகவல் தெரிவிக்க கோரிக்கை:
அம்மாநிலங்களில் தமிழகத்திலிருந்து காணாமல் போன குழந்தைகள் இருப்பது தெரியவந்தால் அவர்கள் தகவல் தெரிவிக்கவேண்டும் என்ற அடிப்படையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.