பிஎஸ்என்எல் வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது... சிபிஐ பதில் மனுவால் மாறன் சகோதரர்கள் பகீர்!
சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக பிஎஸ்என்எல் இணப்புகளை பயன்படுத்தியன் மூலம் அரசுக்கு இழப்பு ஏஏற்படுத்திய மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட யாரையும் விடுவிக்கக் கூடாது என்று சிபிஐ பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை: சன் குழுமத்திற்கு பிஎஸ்என்எல் அதிவேக இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட யாரையும் விடுவிக்கக் கூடாது என்று சிபிஐ பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக திமுகவின் தயாநிதி மாறன் இருந்த போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சென்னை பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து, கோபாலபுரம் , போட் கிளப் சாலையில் இருக்கும் தனது வீடுகளுக்கு கேபிள் பதித்து, அதிவேக உயர் தொலைபேசி இணைப்புகளை கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதால் அரசுக்கு ரூ.1.76 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ தரப்பு குற்றம் சாட்டி இருந்தது.
தயாநிதிமாறன், கலாநிதிமாறன், தயாநிதி மாறனின் சிறப்பு தனிச்செயலாளர் கௌதமன், சன் டிவி தலைமை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் டிவி எலக்ட்ரீசியன் ரவி உள்ளிட்ட 7 பேர் மீது இந்த வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படவிருந்த நிலையில், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

தயாநிதிமாறன் ஆஜராகவில்லை
இந்த வழக்கு இன்று சிபிஐ வழக்குகளுக்கான சென்னை 14-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழும தலைவர் கலாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். ஓய்வுபெற்ற அதிகாரிகள் வேலுச்சாமி, பிரம்மநாதன் ஆகியோர் ஆஜராகவில்லை.

பதில் மனு தாக்கல் செய்தது சிபிஐ
தயாநிதி மாறனின் சிறப்பு தனிச்செயலாளர் கௌதமன், சன் டிவி தலைமை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் டிவி எலக்ட்ரீசியன் ரவி ஆகிய மூவர் மட்டும் ஆஜரானார்கள். அப்போது சிபிஐ தரப்பில் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கூடுதல் ஆவணங்கள் தாக்கல்
அதில் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த கூடுதல் ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்தது. மேலும் இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டள்ளதில் உண்மை இருப்பதால் யாரையும் வழக்கில் இருந்து விட்டுவிடக் கூடாது என்றும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

விளக்கமளிக்க அவகாசம்
மேலும் தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்கள் குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க 3 வார கால அவகாசம் வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நவ. 21ல் விசாரணை
3 வார கால அவகாசம் தர மறுத்த நீதிபதி நடராஜன் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்கள் மீது 10 நாட்களில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுகளுக்கான கூடுதல் ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்துள்ளதால் மாறன் சகோதரர்கள் அதிர்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications