கார்த்தி சிதம்பரம், இந்திராணியை நேருக்கு நேர் உட்கார வைத்து விசாரிக்க சிபிஐ திட்டம்!
கார்த்தி சிதம்பரம் மற்றும் இந்திராணி முகர்ஜி ஒரே அறையில் அமர வைக்கப்பட்டு விசாரிக்கப்பட இருக்கிறார்கள்.
சென்னை: கார்த்தி சிதம்பரம் மற்றும் இந்திராணி முகர்ஜி ஒரே அறையில் அமர வைக்கப்பட்டு விசாரிக்கப்பட இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சிபிஐ செய்து இருக்கிறது.
மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி சிபிஐ கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. ஆனால் கார்த்தி சிதம்பரம் ஆஜாராகாமல் இருந்தார். இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ கைது செய்து இருக்கிறது.
மோசடி
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
5 நாள் கஸ்டடி
இதில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருக்கிறது. தற்போது இவர் ஐந்து நாள் கஷ்டடியில் எடுக்கப்பட்டுள்ளார். இவரது நெருங்கிய நண்பர்கள், அலுவலக ஊழியர்கள் பலர் விசாரிக்கப்பட இருக்கிறார்கள். இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஏற்கனவே சிறையில் இருக்கிறார்கள்.
வாக்குமூலம்
இந்தநிலையில் சிறையிலுள்ள இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நடத்தியது. அதில், இந்த மோசடியில் ப.சிதம்பரத்திற்கு தொடர்புள்ளதாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டது. மேலும் அந்த ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் கூறப்பட்டது.
நேருக்கு நேர்
இதன் காரணமாக தற்போது இவர்கள் நேருக்கு நேர் விசாரணை செய்யப்பட இருக்கிறார்கள். கார்த்தி சிதம்பரம் இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோர் ஒரே அறையில் அமர வைக்கப்பட்டு விசாரிக்கப்பட இருக்கிறார்கள். இதன் காரணமாக இதில் பல புதிய உண்மைகள் வெளிவரும் என்று கூறப்பட்டு இருக்கிறது.