மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடு புகார்.. புதுவை சென்டாக் நிறுவனத்தில் சிபிஐ சோதனை
மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கிரண்பேடி பரிந்துரை செய்ததின் அடிப்படையில் இன்று சென்டாக் நிறுவனத்தில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக புகார் வந்ததாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறி வந்தார்.
இதுகுறித்து உரிய ஆதாரத்தை காட்டுமாறு அம்மாநில முதல்வர் நாராயணசாமி கேட்டு வந்தார். ஆனால், ஆதாரங்கள் எதையும் காட்டாத கிரண்பேடி சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்த மட்டும் பரிந்துரை செய்துள்ளார்.
பாஜக ஆதரவாளரான கிரண்பேடி, காங்கிரஸ் கட்சி தலைமையிலான புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறார். அங்கு யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்தப் பிரச்சனையின் தொடர்ச்சியாக, இன்று சென்டாக் நிறுவனத்தில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.