மகா சிவராத்திரி: ஈஷா யோகா மையத்துக்கு படையெடுத்த நடிகைகள்.. பரவச உற்சாகத்தில் தமன்னா, பூஜா ஹெக்டே!
கோவை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகாசிவராத்திரி விழாவில் நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்று இரவு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காசியில் தொடங்கி ராமேஸ்வரம் வரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இன்று மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கோவை அருகே வெள்ளையங்கிரியில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையத்திலும் மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதுபோல் இந்த ஆண்டும் சிவாரத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் இருக்கும் அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோரும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு ஜக்கி வாசுதேவ் உடன் சேர்ந்து பரவசத்தோடு நடனமாடி வருகின்றனர்.

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவரது துணைவியார் டாக்டர். சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

திரையிசை பாடகர் சங்கர் மஹாதேவன் இசை நிகழ்ச்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து, தன் கம்பீர குரலால் பாடி அரங்கை அதிரs செய்தார் தமிழ் நாட்டுபுற பாடகர் மகாலிங்கம். மும்பை தாராவியை சேர்ந்த இளைஞர்கள் தமிழிலும், இந்தியிலும் ராப் பாடல்களை பாடி பக்தர்களை உற்சாகப்படுத்தினர்.
சினிமா பிரபலங்கள் ஆண்டுதோறும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்பது வழக்கம். அந்தவகையில் நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே, நடிகர் சந்தானம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். நடிகை தமன்னா கடந்த ஆண்டும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றிருந்தார்.












Click it and Unblock the Notifications