ஆரியங்காவு தர்மசாஸ்தா- புஷ்கலாதேவி திருக்கல்யாணம்
ஆரியங்காவு: தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவில் இருக்கும் தர்மசாஸ்தா ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சபரிமலையில் பிரம்மச்சாரியாக காட்சிதரும் ஐயப்பன், தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவில் தர்மசாஸ்தாவாக மனைவி புஷ்பகலா தேவியோடு அருள் பாலிக்கிறார்.
ஆரியங்காவில் தர்மசாஸ்தா- புஷ்கலாதேவிக்கு திருக்கல்யாண உற்சவம் சவுராஷ்டிர சமூகத்தினர் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது.
இந்த ஆலயத்தில் மண்டல பூஜை கடந்த 15ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

சாஸ்தாவிற்கு அலங்காரம்
ஆரியங்காவு ராஜகொட்டாரத்தில் செவ்வாய்கிழமையன்று பாண்டியன் முடிப்பு என்ற நிச்சயதார்த்த சடங்கு நடந்தது. தொடர்ந்து புதன்கிழமையன்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் நலுங்கு வைபவம் எனும் "ஊஞ்சல் உற்சவம்' நடந்தது.
பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தெய்வங்களுக்கு புதிய ஆடைகள் சாத்தப்பட்டன. மாலையில் கோவில் வளாகத்தினுள்ள ஐயனும் காளை வாகனத்திலும், அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் எழுந்தருளினர். அம்பாள் சப்பரம், சுவாமி சப்பரத்தை மூன்று முறை வலம் வந்தது. மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின் இரு சப்பரங்களும் ஒன்றாக வலம் வந்தன.

திருக்கல்யாணம்
திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவ சடங்குகள் நடந்தது. பகவானும், அம்பாளும் சர்வ அலங்கார மணக்கோலத்தில் காட்சியளித்தனர். தேவஸ்வம் சார்பில் தங்கத்தாலி வர, திருமாங்கல்ய பூஜைக்கு பின் சுவாமி, அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். அம்பாள் சார்பில் சவுராஷ்டிரா மக்களும், சுவாமி சார்பில் தேவஸ்வம் அதிகாரிகளும், கேரள, தமிழக பக்தர்களும் பங்கேற்றனர்.

திருமண விருந்து
பக்தர்களுக்கு அன்னதானமும், தேவஸ்வம் சார்பில் மூன்று நாட்கள் சம்பந்தி விருந்தும் வழங்கப்பட்டது. புஷ்கலா தேவி சவுராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சவுராஷ்டிரா சமூக முறைப்படி திருமண நிகழ்ச்சிகள் நடந்தது.

திருவிளக்கு பூஜை
முன்னதாக திருக் கல்யாணத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மண்டலாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications