காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை நிச்சயம்: இல.கணேசன் நம்பிக்கை
மயிலாடுதுறை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட, தமிழகத்தில் உடனடியாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதன் தொடர்ச்சியாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகளின்படியே பின்பற்றுவோம் எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மத்திய அரசு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை பிரச்சனைகளான குடிநீர் பிரச்சனை, வீடுகள் தோறும் சுகாதாரமான கழிப்பிடங்களை உருவாக்குவதையே முதன்மையான அம்சமாக கருதுகின்றது.
இந்த அம்சத்தை குஜராத்தில் செயலாக்கம் செய்துள்ளது போல், நாடு முழுவதும் இதனை செயல்படுத்த மோடி தலைமையிலான மத்திய அரசு ஆர்வம் காட்டுகின்றது.
தமிழகத்தை பொருத்தவரை காவிரி நதி மட்டுமே நீர் ஆதாரமாக உள்ளது. தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து, தமிழகத்தில் உடனடியாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அறிக்கையை சமர்பித்துள்ளார். இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகளின்படியே பின்பற்றுவோம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த கருத்தின் அடிப்படையில் பார்த்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதியாக நம்பலாம்.
பா.ஜனதா கட்சியின் தேசியப் பொதுக்குழு உறுப்பினரும், மயிலாடுதுறையை சேர்ந்த வக்கீலுமான கே.ராஜேந்திரன் கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்ததையடுத்து, தமிழக அரசும் ரூ.117 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளது. இவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கவேண்டும்.
தமிழகத்தின் நீர் பற்றாக்குறையை போக்குவதற்கு தமிழக நீர்நிலைகள் சீர் செய்யப்படவேண்டும். மழை காலங்களில் வெள்ளநீர் வீணாக சென்று கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுப்படவேண்டும். தமிழக நீர் ஆதார பிரச்சனைக்கு ஒரு இதுவும் தீர்வாக அமையும்.
இவை எல்லாவற்றிற்க்கும் மேலாக முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் காலத்தில் தென்னக நதிகளை இணைக்க திட்டம் தீட்டப்பட்டது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மகாநதி கோதாவரி, கிருஷ்ணா நதி போன்ற தென்னந்திய நதிகளை இணைக்கப்பட்டால் தமிழகத்தில் நீர் பற்றாக்குறையே இருக்காது. இவையை காவிரி நதிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகவும் அமையும்.'
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இப்பேட்டியின் போது பா.ஜனதா தேசியப்பொதுக் குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், மாநிலத்துணைத் தலைவர் கோவி.சேதுராமன், நாகை மாவட்டப் பொதுச் செயலாளர் நாஞ்சில்.பாலு, நகர செயலாளர் முட்டம்.செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications