சமையல் கியாஸ் மானியம் ரத்து அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: சமையல் கியாஸ் மானியம் ரத்து அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நம் நாட்டில் 16.35 கோடி பேர் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் சுமார் 58 லட்சம் பேர் மானியத்துடன் கூடிய சிலிண்டர்களை பெறுவதை நிறுத்திக்கொண்டனர். இதன் மூலம் மத்திய அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மானியத் தொகை மேலும் மிச்சமானது.

இந்த நிலையில், வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறுபவர்கள், வரும் ஜனவரி மாதம் முதல் மானிய விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் பெற முடியாது என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய பா.ஜ.க அரசு மறுபரிசீலனை செய்து ஏற்கனவே நடைமுறையில் இருந்த மானியத்துடன் கூடிய கியாஸ் சிலிண்டர்களை அனைவரும் பெற்று பயன்பெற வழி வகுக்க வேண்டும்.
மேலும், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு வெகுவாகக் குறைந்துள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் கியாஸ் சிலிண்டர்களின் விலையை குறைத்து கொடுப்பதற்கும் மத்திய பா.ஜ.க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் வாசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications