26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.11 முதல் மத்திய அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை: புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி ஏப்ரல் 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 26 ஆயிரம், 52 வகையான படிகளை ரத்து செய்யக்கூடாது, ஐந்து முறை பதவி உயர்வு உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 11 முதல் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். மார்ச் 11 இல் மத்திய அரசுக்கு இதுகுறித்து நோட்டீஸ் வழங்க உள்ளனர்.
இதையடுத்து சங்கத்தினருடன் முதற்கட்ட பேச்சு பிப்ரவரி 19 இல் நடந்தது. மத்திய நிதித்துறை செயலர் ஆர்.கே.சதுர்வேதி போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலருமான சிவகோபால் மிஸ்ரா, அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அது தோல்வியில் முடிந்ததால் இரண்டாம் கட்ட பேச்சு மார்ச் 1 இல் கேபினட் செயலர் பிரதீப்குமார் சின்கா தலைமையில் நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. திட்டமிட்டபடி ஏப்ரல் 11 முதல் வேலைநிறுத்தம் தொடங்கும் என போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications