”சுப்ரமணிய சாமிக்கு தெரிஞ்சது எனக்கு தெரியாதுங்க”- மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!
திருவாரூர்: கருப்புப் பண விவகாரம் பற்றி சுப்ரமணிய சாமிக்கு தெரிந்ததெல்லாம் எனக்குத் தெரியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு நேற்று பா.ஜ.க முன்னால் தலைவரும், மத்திய இணைஅமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வருகை தந்தார்.
அப்பொழுது அவர் பல்வேறு திட்டங்கள் பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அகல ரயில்பாதை திட்டம்:
அதில், ‘'திருவாரூர் முதல் காரைக்குடி வரையில் உள்ள அகல ரயில்பாதை திட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை வரையிலும் பணிகள் முடங்கி கிடப்பது குறித்து விரைவில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு விரைவில் டெல்லியில் ரயில்வே அமைச்சரை சந்தித்து பேச உள்ளது. விரைவில் திட்டம் நிறைவேற முயற்சி செய்யப்படும்.
கருப்பு உன்னை கேட்கறாங்க:
பொன்.ராதாகிருஷ்ணனிடம் கருப்பு பணம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, அருகில் இருந்த மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்ததை பார்த்து "இந்தாப்பா கருப்பு உன் பணத்தை பற்றி கேக்குறாங்க" என்று கமெண்ட் அடித்தார். இதனால் அங்கு அனைவரும் சிரித்து ஒரே கலகலப்பு ஏற்பட்டது.
நரேந்திர மோடியின் சபதம்:
நாட்டின் பணத்தை மறைமுகமாக எடுத்து சென்று அயல் நாட்டுகளில் பதுக்கி வைத்திருக்கும் கொள்ளைக்காரர்களிடம் இருந்து கருப்பு பணத்தை மீட்போம் என்று நரேந்திர மோடி கூறியிருந்தார்.
பெயர் பட்டியல் வெளியாகும்:
அதன்படி 677 பேர்களின் பட்டியலை வெளியிட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. விரைவில் மற்ற நாடுகளில் மற்ற வங்கிகளிலும் உள்ள பணங்களும் மீட்டு அவர்களின் பெயர் பட்டியலும் வெளியாகும்.
எனக்கு சத்தியமா தெரியாது:
கருப்பு பணம் விவகாரத்தில் சோனியா, ராகுல்காந்தி போன்ற காங்கிரஸார் பெயரும் உள்ளது என்று சுப்ரமணியசாமி கூறுகிறாரே என்ற கேள்விக்கு "சுப்ரமணியசாமிக்கு தெரிந்தது எனக்கு தெரியாது" என்று சிரிப்புடன் தெரிவித்தார்.