போக்குவரத்து ஊழியர் ஊதிய உயர்வு தரும்வரை திமுக எம்எல்ஏக்களின் சம்பள உயர்வு மறுப்பு தொடரும்: ஸ்டாலின்
உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னையில் மே தின நினைவு தூணுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை எல்லாம் நிறைவேற்றப்படும் வரை எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வுக்கு திமுக மறுப்பு தெரிவிக்கும் என்று உழைப்பாளர் தின கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிபேட்டையில் மே தின பூங்காவில் உள்ள நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிவப்பு நிற உடையில் வந்திருந்த அவர், அங்கிருந்த பொதுமக்கள், தொழிலாளர்கள் முன்னிலையில் பேசினார்.
அதில் ''''முதன்முறையாக மே தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்தது திமுக தான்.மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் மே தின விடுமுறை பெற்று தந்தவர் கருணாநிதி. தொழிலாளர்களின் நலனில் திமுக எப்போதும் முக்கியத்துவம் செலுத்தும்'' என்றார்.
மேலும் ''மத்தியிலும் மாநிலத்திலும் தொழிலாளர்கள் விரோத ஆட்சிகளாக உள்ளதால் மக்கள் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். மத்திய, மாநில ஆட்சிகளை அகற்ற உறுதிமொழி ஏற்க வேண்டும். இரண்டு அரசுகளும் தொழிலாளர்களுக்கு இதுவரை எதுவும் செய்ததில்லை.'' என்றார்.
முக்கியமாக''தற்போது போக்குவரத்து ஊழியர்கள் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதால் அவதிப்பட்டு வருகிறார்கள். பஸ் ஊழியர் பிரச்சனை தீரும்வரை எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வுக்கு திமுக மறுப்பு தெரிவிக்கும், அரசு என்பது மக்களுக்கானதுதான்'' என்றுள்ளார்.