ஐடி ரெய்டு: முதல்வர் பதவியை கபளீகரம் செய்வாரோ தினகரன்? போட்டுக் கொடுத்தது எடப்பாடி தரப்பு?
அதிரடி வருமான வரி சோதனைகள் மூலம் முதல்வர் பதவி கனவில் மிதக்கும் டிடிவி தினகரனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு என்றே கூறப்படுகிறது.
சென்னை: ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் எப்படியும் வெல்வது அல்லது பணப்பட்டுவாடா மற்றும் வன்முறைகளை ஏற்படுத்தி தேர்தலை ரத்து செய்ய வைப்பது என்ற அஜெண்டாவுடன் செயல்படும் தினகரனுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்தான் மத்திய அரசு அதிரடி ஐடி ரெய்டுகளை ஏவிவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தினகரன் தொடர்பான விவரங்களை விலாவாரியாக மத்திய அரசிடம் போட்டுக் கொடுத்ததும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புதான் என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.
ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் அமரதுடிக்கிறார் தினகரன். ஆனால் மத்திய அரசு இதை சகித்துக் கொள்ள முடியாது என்பதில் கறாராக இருக்கிறது.
அதேபோல் தினகரன் வெற்றி பெற்றுவிட்டால் தங்களுக்கு சிக்கல் என்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்களுக்கும் தெரியும். இதனால்தான் அமைச்சர்கள் பலரும் ஆர்கே நகரில் ஜரூராக உள்ளடி வேலைகளை பார்த்து வருகின்றனர்.

அதிரடி ரெய்டு
இந்த நிலையில்தான் தினகரன் ஆதரவு அமைச்சர் விஜயபாஸ்கர் உளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் அடைத்து வைத்தது சகல வசதிகளையும் செய்து கொடுத்ததில் விஜயபாஸ்கருக்கு முக்கிய பங்கு உண்டு.

எல்லாமும் விஜயபாஸ்கர்
இப்போது தினகரனை முதல்வராக்குவது என்பதிலும் மும்முரமாக இருந்து வருகிறார் விஜயபாஸ்கர். ஆர்கே நகர் தொகுதிக்கான ஒட்டுமொத்த பணப்பட்டுவாடாவும் விஜயபாஸ்கர் தலைமையில்தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணப்பட்டுவாடா எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என அதிமுக தரப்பில் இருந்தே மத்திய அரசுக்கு விலாவாரியாக போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அன்று ஓபிஸ்
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னர் அதிரடி ரெய்டு நடத்தி இருந்தனர். இதற்கு காரணமே ஓ.பன்னீர்செல்வம்தான் என கூறப்பட்டது. அதாவது சசிகலாவுக்கு மிக நெருக்கமானவராக பினாமியாக எடப்பாடி பழனிச்சாமி எப்படியெல்லாம் செயல்படுகிறார் என்கிற விவரத்தை போட்டுக் கொடுத்ததே ஓபிஎஸ்தானாம்.

இன்று எடப்பாடி
இப்போது அதே பாணியில் தினகரனுக்கு யார் யார் பினாமி? விஜயபாஸ்கர் எப்படியெல்லாம் பணப்பட்டுவாடா செய்கிறார் என்கிற முழு விவரத்தையும் எடப்பாடி தரப்புதான் மத்திய அரசிடம் விலாவாரியாக தந்திருக்கிறதாம். இதனடிப்படையில்தான் குறிவைத்து ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.

மத்திய அரசு vs தினகரன்
மத்திய அரசைப் பொறுத்தவரையில் தினகரன் வசம் அதிமுக செல்லக் கூடாது; முதல்வர் நாற்காலியில் அமரக் கூடாது என நினைக்கிறது. ஆனால் தினகரனோ வெற்றி பெற்று முதல்வராவது இல்லையெனில் தேர்தலை நடத்தவிடாமல் செய்து தொடர்ந்து கட்சியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்கிற அஜெண்டாவுடன் இருக்கிறாராம்.

ரெட் சிக்னல் இதுக்குதான்
ஒருவேளை தேர்தலில் தோற்றுவிட்டால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் கைகோர்த்துவிடும்; தம்மை ஓரங்கட்டிவிடுவார்கள் என்கிற அச்சமும் உதறலும் தினகரனுக்கு இருக்கிறதாம். இதனால்தான் பணப்பட்டுவாடா, வன்முறை என முழுவீச்சில் களமிறங்கியிருக்கிறாராம் தினகரன். இதற்குதான் ஐடி ரெய்டுகள் மூலம் ரெட் சிக்னல் எனப்படும் வார்னிங் கொடுத்திருக்கிறதாம் மத்திய அரசு.












Click it and Unblock the Notifications