ராமர் பாலத்தை சேதப்படுத்த மாட்டோம் என மத்திய, மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும்: ராம கோபாலன்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக மத்திய அரசு நியமித்த பச்சோரி கமிட்டி அறிக்கையை நிராகரிப்பதாக மத்திய அரசு கூறுவது அரசின் நம்பகத்தன்மைக்கு ஏற்புடைய செயல் அல்ல.
கடந்த ஆறு ஆண்டுகளாக இருந்த தடையை தற்போது நீக்க வேண்டும் என்றும், பச்சோரி கமிட்டி அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாகவும் மத்திய அரசு தனது மனுவில் கூறியுள்ளதை இந்து முன்னணி கண்டிக்கிறது. திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மத்தியில் காங்கிரஸ் அரசு இந்த நாடகத்தை அரகேற்றி இருக்கலாம்.
இன்னும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் காலம் 14 மாதங்கள் கூட இல்லாத நிலையில், சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்தவே நாங்கள் முனைந்தோம் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படத்தவே இந்த மனு. உச்ச நீதிமன்றம் இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
ராமர் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தைச் சார்ந்த தொன்மையான ஆலயங்கள் குறித்து தொல்லியல் துறை மூலம் ஆராய வேண்டும், அவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்த மாட்டோம் என்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதிபடுத்திட உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.