சூப்பர்.. சாதித்த விசிக.. பட்டியலின மக்களின் வீதியில் நுழைந்த திருத்தேர்.. துள்ளிகுதித்த திருப்போரூர்
திருப்போரூர் முருகன் கோயில் தேரோட்டம் பட்டியல் சமூக மக்கள் வீதிகளின் வழியாக சென்றது
செங்கல்பட்டு: திருப்போரூர் முருகன் கோயில் தேர் உற்சவம் நூற்றாண்டுகளுக்கு பின்னர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்கள் தேர் உற்சவத்தை பட்டாசு வெடித்து, தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ளது கந்தசுவாமி திருக்கோயில். இந்த கோயில் சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. குறைந்த காலங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக இருந்தாலும், இந்த புதிய கட்டிடத்திற்கு முன்னர் ஏற்கெனவே இங்கு பழைய கோயில் ஒன்று இருந்திருக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து போரிட்ட மூன்று இடங்களில் திருப்போரூரும் ஒன்று என தல வரலாறு குறிப்பிடுகிறது.
தொல்லியல் துறை வரலாற்றின்படி 17ம் நூற்றாண்டில் ஆதீனம் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் இந்த கோயிலை மறுசீரமைப்பு செய்ததாக தெரிய வருகிறது. மேலும் இப்பணியை இவருக்கு அடுத்து வந்த ஆதீனங்கள் விரிவுபடுத்தினர். அதன்படி புதிய குளம் அமைத்தல், கோயில் கட்டுதல் என பல திருப்பணிகளை இந்த பகுதியை சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் மேற்கொண்டுள்ளனர். அதேபோல கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கோயிலுக்கு தினமும் விளக்கேற்றி, தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

வலியுறுத்தல்
இதற்காக இவர்களுக்கு கோயில் சார்பில் மானியமும் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல கோயில் பிரம்மோற்சவ விழாவிற்கு முன்னதாக கிராம காவல் தெய்வமான முண்டச்சி அம்மன் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து முதல் மரியாதை பெற்ற பின்னர்தான் கோயில் பிரம்மோற்சவ விழா நடைபெறும். ஆனால் இந்த வழக்கம் கடந்த இரு ஆதினங்கள் காலத்தில் கைவிடப்பட்டுள்ளது. எனவே தேர் உற்சவம் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் படவேட்டம்மன் வீதிகள் வழியாக செல்வது தடை செய்யப்பட்டது. இதனையடுத்து இப்பகுதி மக்கள் மீண்டு தேர் உற்சவம் தங்கள் தெருக்களில் வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விசிக
அதேபோல மேற்குறிப்பிட்ட தகவல்களை விரிவாக குறிப்பிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாரதி சமரன் சில நாட்களுக்கு முன்னர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் உயர்நீதிமன்றத்திலும் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதி வழியாக தேர் உற்சவம் நடைபெற வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். மறுபுறம் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் கோயிலின் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. விரைவில் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

உயர்நீதிமன்றம்
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர் உற்சவம் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் படவேட்டம்மன் வீதி வழியாக கொண்டு செல்லப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பட்டியல் சமூக மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதேபோல நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நேற்று திருப்போரூர் முருகன் கோயில் தேர் உற்சவம் படவேட்டம்மன் தெரு வழியாக வந்து சென்றது. ஏறத்தாழ நூற்றாண்டுகளுக்கு பின்னர் தேர் உற்சவம் தங்களது தெருக்களில் வருவதை பார்த்த மக்கள் பட்டாசு வெடித்து, நூற்றுக்கணக்கான தேங்காய் உடைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கடவுளை வழிபட்டனர்.

தேரோட்டம்
அதேபோல தேர் உற்சவத்திற்கு 300க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் நண்பகலில் நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து இன்று தீர்த்தவாரியும் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. மேலும் வரும் 9ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications