மழை பெய்தும் தண்ணீர் இல்லை: கார் சாகுபடி கவலையில் நெல்லை விவசாயிகள்
நெல்லை: மழை பெய்தும் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கார் சாகுபடி இந்தாண்டு நடக்குமா என்று தெரியவில்லை. இதனால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இரு அணைகளை நம்பியே நெல்லை மாவட்டத்தில் நெல் சாகுபடி நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் கார் பருவ சாகுபடியும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிசான பருவ சாகுபடியும் நடக்கும்.
சாரல் மழை
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சாரலாக வெளுத்து வாங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலை கிராங்களில் கார் சாகுபடி முழுமையாக நடந்தது.
நிரம்பாத குளங்கள்
ஆனால் இந்தாண்டு வழக்கத்தை விட கோடை காலத்தில் அதிக மழை பெய்த போதிலும் குளங்கள் முழுமையாக நிரம்பவில்லை. கோடை காலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 37.84 மிமீ மழை பெய்துள்ளது.
வறண்ட குளங்கள்
ஆனாலும் குளங்களில் நீர் இருப்பு கார் பருவ சாகுபடிக்கு போதுமானதாக இல்லை. அதிலும் நெல்லை சுற்றுவட்டார குளங்கள் வறண்டு காட்சியளிப்பதோடு கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கூட இல்லை.
மணிமுத்தாறு அணை
மணிமுத்தாறு அணையில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது. கார்சாகுபடியை செய்யும் விவசாயிகள் பாபநாசம் அணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாபநாசம் அணையில் இருந்து கார்பருவ சாகுபடிக்காக ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறக்கப்படும்.
நிரம்பாத பாபநாசம் அணை
ஆனால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 54 அடியாக உள்ளது. அணையில் நீர்மட்டம் 75 அடியாக உயர்ந்தால் மட்டுமே அணையை திறக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தரிசான விளைநிலங்கள்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி பாபநாசம் அணை திறக்கப்பட்டது. இவ்வாண்டு அதற்கு வாய்ப்பில்லை. நெல்லை மாநகர பகுதிகளில் விளை நிலங்கள் தரிசமாக கிடக்கின்றன.
அணை நிரம்புமா?
தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே கார் சாகுபடி செய்ய முடியும் என்கின்றனர்.