48 மணி நேரத்தில் இடி மின்னலோடு கனமழை பெய்யுமாம்: ரமணன் எச்சரிக்கை
சென்னை: கன்னியாகுமரி அருகே வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி அருகே வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் பரவலாக மழை பெய்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் குமரி கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இது மேலும் வலுப்பெற்று 24 மணி நேரத்தில் அதாவது இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும் மழை பெய்யும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை நகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழை பெய்யும். கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் தென் தமிழகம் - லட்சத்தீவு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. முத்துப் பேட்டையில் 6 செ.மீ., காட்டு மன்னார்கோவில், கடலூர், குளச்சலில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

கடலூரில் தொடரும் மழை
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நேற்று கடலூரில் காலையில் பெய்த மழை மதியம் வரை நீடித்தது. பின்னர் இரவு முழுவதும் லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. இன்று காலை 6 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

கடல் சீற்றம்
கடலூரில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. அதிக உயரத்துக்கு அலைகள் எழுகின்றன. நெல்லிக்குப்பத்திலும் இரவு முழுவதும் மழை பெய்தது. காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சி.முட்லூர், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளிலும் நேற்று காலையில் பலத்த மழை பெய்தது.

உப்பளத்தொழில் பாதிப்பு
மரக்காணத்தில் 5 ஆயிரம் ஏக்கர் உப்பளம் உள்ளன. கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் உப்பளத்திற்குள் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சுமார் ரூ.15 லட்சம் அளவிற்கு உப்புகள் சேதம் அடைந்துள்ளன.

2004ம் ஆண்டு போல
கடந்த 2004ம் ஆண்டு இதேபோல் அக்னி நட்சத்திர காலத்தில் மரக்காணத்தில் பலத்த மழை பெய்ததால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டது. அதேநிலை இப்போது நடந்துள்ளதாக உப்பளத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுவையில் வெள்ளம்
புதுவையிலும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. காரைக்காலிலும் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்தது. இன்று லேசாக மழை தூறி வருகிறது.

கோடையை குளிர்விக்கும் மழை
அக்னி நட்சத்திர காலத்தில் அடைமழையும், குளிர்காற்றும் வீசுவதால் பொதுமக்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். கோடை வெப்பத்தை குளிர்விக்க வைத்த வருணபகவானுக்கு நன்றி கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications