அதிகரிக்கும் பாலியல் வக்கிரங்கள்.. கூவாகத்தில் குறையும் அரவாணிகள் கூட்டம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலுக்கு வரும் அரவாணிகளின் கூட்டம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு குறிப்பிட்ட காரணம் என்று எதுவும் சொல்ல முடியவில்லை. அதேசமயம், அதிகரிக்கும் பாலியல் வக்கிரங்களும் இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
அரவாணிகள் சமூகத்தின் கலாச்சாரப் பெருமையாக கூவாகம் சித்திரைத் திருவிழா திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. வருடா வருடம் இங்கு கூடும் அரவாணிகள், கூத்தாண்டவர் கோவிலில் சாமி கும்பி்ட்டுச் செல்வதை கடமையாக நினைக்காமல், தங்களது பெருமையாக நினைத்து வருகிறார்கள். ஆனால் வருடா வருடம் இங்கு கூட்டம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
முன்பு மாதிரி இல்லை
முன்பெல்லாம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா மிகுந்த பயபக்தியுடன், சம்பிரதாயம் வழுவாமல் நடைபெறும். ஆனால் இப்போது அப்படி இல்லை என்கிறார்கள். பலரிடம் பக்தி குறைந்து விட்டதாகவும் குறைப்படுகிறார்கள்.
18 நாள் விழா
ஏப்ரல் - மே மாதத்தில் 18 நாட்கள் நடைபெறும் விழா தான் இது. அரவாணிகள் தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வருவார்கள். கூத்தாண்டவர் கோவில் விழாவையொட்டி கூவாகமே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.
நூற்றாண்டு கால திருவிழா
பல நூற்றாண்டுகளாக இங்கு இந்தத் திருவிழா நடைபெறுவதாக கூறுகிறார்கள். அரவானின் ஒரு நாள் கல்யாணக் கதைதான் இந்தக் கோவிலின் வரலாறாகும். முதல் 16 நாள் விழாவின்போது பாடல்கள், நடனம் என களை கட்டுகிறது. அழகிப் போட்டிகளும் இப்போது சேர்ந்துள்ளன. மேலும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் கூடுதலாக இணைந்துள்ளன.
17வது நாளில் தாலி கட்டுதல்
17வது நாளில் அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். கோவில் பூசாரி அரவாணிகளுக்கு தாலி கட்டி விடுவார். அன்று இரவு முழுவதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும்.
கடைசி நாளில் தாலியறுப்பு
கடைசி நாளில் காளி அரவானின் தலையைக் கொய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து அரவாணிகள் தாலிகளை அறுத்து விதவைக் கோலம் பூண்டு அன்றோடு விழா முடிவடைகிறது.
முக்கியஸ்தர்கள் வருகை குறைவு
எப்போதும் போலவே இந்த முறையும் தமிழகத்தின் பிரபலமான அரவாணிகள் பலரும் இந்த முறையும் வரவில்லை. காரணம், கூவாகத்தில் பாலியல் வக்கிரங்கள் அதிகரித்து விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
விதம் விதமான தொல்லைகள்
இதுகுறித்து பொன்னி என்ற அரவாணி கூறுகையில், விதம் விதமான பாலியல் தொந்தரவுகளை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால்தான் பலரும் வர விரும்புவதில்லை. பெண்களாக இருந்தால் பாலியல் பலாத்காரம் என்று சொல்லி விடலாம். எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று கூறுகிறார் அவர்.
5000 பேர்தான்
இந்த முறை 3000 முதல் 5000 பேர் வரைதான் வந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. கடந்த ஆண்டுகளில் இதை விட அதிகம் பேர் வந்ததாக கூறுகிறார்கள்.
வேறு கோவில்களின் பெருக்கம்
திருவண்ணாமலை, புலியூர் குப்பம் ஆகிய இடங்களிலும் இதேபோல விழாக்கள் கொண்டாடப்படுவதால் பல அரவாணிகள் அங்கு போய் விடுவதாக ஒரு தகவல் கூறுகிறது. இதுவும் கூவாகத்தில் கூட்டம் குறையக் காரணம் என்கிறார்கள்.