பேய் ஓட்டும் சீரியல்களை நிறுத்துங்கள்.... சன்டிவி உள்பட பல சேனல்களுக்கு பிசிசிசி உத்தரவு
சென்னை: ஆவி, பேய், பூதம், சூனியம் வைத்தல், பேய் ஓட்டுதல் போன்றவைகளை டிவி சீரியல்களில் ஒளிபரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில் ( பிசிசிசி) உத்தரவிட்டுள்ளது.
பெண்களை சூனியக்காரியாக, பேய் ஓட்டுபவராகவும் சித்தரிக்கக் கூடாது எனவும் சன் டிவி உள்பட பல டிவி சேனல்களுக்கு ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இரவு பத்து மணிக்கு மேல் பல தொலைக்காட்சிகளில் பேய் சீரியல்கள்தான் ஒளிபரப்பாகின்றன. சன் டிவியில் ஆதிரா என்றும், வேந்தர் டிவியில் 7ம் உயிர் என்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. ஞாயிறு இரவுகளில் பைரவி என்று சீரியல் போட்டு பேய் ஓட்டுகிறார்கள்.
புகார் அளித்த நேயர்
சன்டிவி, மா டிவி, ஜீ, கலர்ஸ் டிவி போன்ற சேனல்களில் இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை பிரைம் டைமில் ஒளிபரப்பப்படும் சில நெடுந்தொடர்களில் பெண்கள் சூனியக்காரியாக, பேய் ஓட்டுபவராக சித்தரிக்கப்படுவதாக ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சிலுக்கு சில புகார்கள் சென்றன.
பிசிசிசி உத்தரபு
நேயர்கள் புகாரின் அடிப்படையில் இனி நெடுந்தொடர்களில் பெண்களை சூனியக்காரியாக, பேய் ஓட்டுபவராக சித்தரிப்பதை தொலைக்காட்சி சேனல்கள் நிறுத்திக் கொள்ளுமாறு ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட சேனல்களுக்கு அனுப்பியிருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆய்வு செய்து உத்தரவு
இந்த உத்தரவு அனைத்து பொழுதுபோக்கு சேனல்களுக்குமே இந்த உத்தரவு பொருந்தும் என ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி நேயர்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து ஜீ, கலர்ஸ், சன், மா போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சில நெடுந்தொடர்களை ஆராய்ந்து இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
மூட நம்பிக்கை சீரியல்கள்
மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான நிகழ்ச்சிகள், பெண்களை சூனியக்காரிகளாக, பேய் ஓட்டுபவர்களாக தவறாக சித்தரிக்கும் நெடுந்தொடர்களை ஒளிபரப்புவதில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அந்த சேனல்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இருப்பினும் அனைத்து பொழுதுபோக்கு சேனல்களுக்குமே இந்த உத்தரவு பொருந்தும்" என பிசிசிசி தெரிவித்துள்ளது.
ஜோதிட நிகழ்ச்சிகள்
கர்நாடக முதல்வர் சித்தராமையா சேனல்களில் ஜோதிட நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில் மேலும் ஒரு வழிகாட்டுதலை அறிவித்துள்ளது
வழிகாட்டு நெறிமுறைகள்
டிவி சேனல்களின் கருத்து சுதந்திரத்தை இந்த கவுன்சில் மதிக்கிறது. இருப்பினும் மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க முடியாது. எனவே, இந்த கவுன்சில் சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.
பொறுப்புத் துறப்பு வாசகங்கள்
கதைக்கருவுக்கு தேவைப்படுவதால் அத்தகைய சித்தரிப்புகளை அனுமதிக்கும் பட்சத்தில் சேனல்கள் பொறுப்புத் துறப்பு வாசகங்களையும் சேர்த்து ஒளிபரப்ப வேண்டும். அதாவது நெடுந்தொடரில் காண்பிக்கப்படும் மூடநம்பிக்கை காட்சிகளை நாங்கள் ஊக்குவிக்கவில்லை என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இரவு 11மணிக்கு மேல் ஒளிபரப்பலாம்
இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 51 (ஏ)-வில் நாட்டு மக்கள் அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதை ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில் மேற்கோள் காட்டியுள்ளது. டிவி சீரியலின் முழுக்க முழுக்க சூனியம் சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில் அத்தகைய தொடர்களை அதிகப்படியான பொதுமக்கள் டிவி பார்க்கும் பிரைம் டைமை தவிர்த்துவிட்டு இரவு 11 மணிக்கு மேலேயே ஒளிபரப்ப வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் நிறுத்தச் சொல்லலாம்
மூடநம்பிக்கை தொடர்களை நிறுத்த அறிவுறுத்தியுள்ளது போல கவர்ச்சி ஆடைகள் அணியவும், இருதார திருமணங்களை ஊக்குவிப்பதையும், கள்ளத்தொடர்புகளை ஆதரிக்கும் டிவி சீரியல்களை நிறுத்தவும் பிசிசிசி உத்தரவிடலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.