பெண் வக்கீலுக்கு பாலியல் தொந்தரவு: கோயம்பேட்டில் ஒட்டுநர், நடத்துனர்கள் 5 மணிநேரம் போராட்டம்
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்தில் பெண் வக்கீலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை பிடிக்க உதவி செய்யாத பேருந்து, நடத்துனர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதில் போலீசாருக்கும் ஓட்டுநர், நடத்துனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் போராட்டம் வெடித்தது. நள்ளிரவு 5 மணிநேரம் ஏற்பட்ட போராட்டம் காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10 மணிக்கு மாநகர பஸ் 15எப் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டது. இரவு நேரம் என்பதால் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
கோயம்பேட்டைச் சேர்ந்த பெண் வக்கீல் விஜயலட்சுமி (வயது38) என்பவரும் அந்த பயணம் செய்தார். சேத்துப்பட்டு அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது பெண் வக்கீலிடம் ஒரு வாலிபர் சில்மிஷம் செய்து இடுப்பை கிள்ளியதாக கூறப்படுகிறது.
உடனே அந்த வாலிபரை கண்டித்த விஜயலட்சுமி, நடத்துனரிடம் முறையிட்டார். பேருந்தை நிறுத்துமாறு கூறினார். ஆனால் அந்த வாலிபரின் சில்மிஷம் தொடர்ந்தது. இதனால் செருப்பை காட்டி கண்டித்தார். சக பயணிகளிடம் முறையிட்டார். இதனால் அந்த நபர் பேருந்தில் இருந்து இறங்கி ஓட முயன்றார். பயணிகள் அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்தனர். சேத்துப்பட்டு பாலம் அருகே பேருந்து மெதுவாக சென்றபோது பஸ்சில் இருந்து குதித்து அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.
பேருந்தை நிறுத்தி இருந்தால் அந்த வாலிபரை பிடித்திருக்கலாம். நடத்துனரும் ஓட்டுனரும் கண்டு கொள்ளாமல் இருந்ததால் அவர் தப்பி விட்டார் என்று பெண் வக்கீல் ஆவேசம் அடைந்தார். இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்த சம்பவங்களை கூறினார். அதற்குள் பேருந்து கோயம்பேடு வந்து விட்டது. இதனால் கோயம்பேடு போலீசாரிடம் வக்கீல் விஜயலட்சுமி முறையிட்டார். நடத்துனர் அசோக் மீதும் புகார் கொடுத்தார்.
தகவல் அறிந்து போலீஸ் துணை கமிஷனர் மனோகரன், உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் அரிக்குமார் ஆகியோர் நடத்துனர் அசோக்கை பிடித்து விசாரித்தனர். ஓட்டுனரும் அவருடன் வந்திருந்தார்.
இதற்கிடையே நடத்துனர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று போலீஸ் நிலைய வாசலிலேயே பெண் வக்கீல் அமர்ந்தார்.
ஓட்டுநர் மற்றும் நடத்துனரை போலீசார் விசாரிப்பதை அறிந்த மற்ற பேருந்தின் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி விட்டு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்..
அப்போது போலீசாருக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் லத்தியால் விரட்டியடித்தனர்.
இந்த மோதலில் நடத்துனர் பிரபுவுக்கு அடி விழுந்தது. இதனால் ஆவேசம் அடைந்த போக்குவரத்து ஊழியர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தினர்.
கோயம்பேடு 100 அடி ரோடு, பூந்தமல்லி ரோடு, திருமங்கலம் ரோடு பகுதிகளில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் எந்த பேருந்தும் நகரவில்லை. எந்த பேருந்தும் கோயம்பேடு உள்ளே செல்ல முடியவில்லை. வெளியேயும் வர முடியவில்லை.
வெள்ளிக்கிழமை இரவு என்பதால் வெளியூர் செல்லும் பயணிகளும் போக முடியாமல் தவித்தனர். உள்ளூர் பயணிகள் போக்குவரத்து ஊழியர்களை திட்டிக்கொண்டே நடந்தே வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். இரவு 10.30 மணியில் இருந்து அதிகாலை வரை பல மணி நேரம் போக்குவரத்து முடங்கி ஸ்தம்பித்தது.
இதனையடுத்து இணை கமிஷனர்கள் சண்முகவேல், தினகரன், மகேஷ்குமார், போக்குவரத்து துணை கமிஷனர் பன்னீர்செல்வம், மனோகரன் ஆகியோர் ஓட்டுநர்கள், நடத்துனர்களிடம் சமாதான பேச்சு நடத்தினார்கள். மாநகர போக்குவரத்து கழக மேலாளர் பத்மநாபனை அழைத்து வந்து சமாதானப்படுத்த சொன்னார்கள்.
ஈவ்டீசிங் செய்த வாலிபரை கைது செய்வதாகவும் ஓட்டுநர்- நடத்துனரை விட்டு விடுவதாகவும் அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும் போலீசார் கூறினர். இதை ஏற்று அதிகாலை 3 மணிக்கு போராட்டம் முடிவுக்கு வந்தது.
கோயம்பேடு பகுதியில் நள்ளிரவு சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications