ரூ.3 கோடி மோசடி: பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் எஸ்.ஆர். தேவர் கைது
சிவகங்கை: 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவரான எஸ்.ஆர்.தேவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி வழக்கு தொடர்பாக தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் பி.டி.அரசகுமார், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது கட்சியின் தலைவரான எஸ்.ஆர்.தேவர் மீதும் மோசடி புகார் கூறப்பட்டது.
ஏற்கனவே காரைக்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் எஸ்.ஆர்.தேவர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஜெமினி கணேசனின் மருமகன் டாக்டர் செல்வராஜிடம் ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கு தொடர்பாக எஸ்.ஆர்.தேவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் செல்வராஜூம், சிவகங்கை மாவட்டம் மறவமங்களத்தை சேர்ந்த சரவணபெருமாள் என்பவரும் கூட்டாக தொழில் செய்வதற்காக, ரூ.32 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டாக்டர் செல்வராஜ், எஸ்.ஆர்.தேவரை சந்தித்து முறையிட்டுள்ளார்.
அப்போது, அவர் சரவண பெருமாளிடமிருந்து ரூ.9 கோடியை பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளார். இதன்படி சரவண பெருமாளிடம் இருந்து ரூ.9 கோடியை வாங்கிய எஸ்.ஆர்.தேவர், அதில் ரூ.6 கோடியை மட்டும் செல்வராஜிடம் கொடுத்து விட்டு 3 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரிலேயே எஸ்.ஆர்.தேவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புதுக்கோட்டை சிறையில் இருந்து நேற்று மாலை அழைத்து வரப்பட்ட எஸ்.ஆர்.தேவர், சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications