பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் மறுப்பு.. ஜேசிபி கண்ணாடியை உடைத்த வழக்கில் மனு தள்ளுபடி
செங்கல்பட்டு: பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டுக்கு அருகே பாஜக கொடிக்கம்பம் அகற்றும்போது ஏற்பட்ட பிரச்சனையில் ஜேசிபி கண்ணாடியை உடைத்ததாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு ஜாமீன் மறுத்து அதற்கான மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு அருகே பாஜக கொடிக்கம்பம் நட்டு வைக்கப்பட்டது. இந்த கொடிக்கம்பத்துக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து நள்ளிரவில் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் அந்த கொடிக் கம்பத்தை அகற்ற சென்றனர். இதுபற்றி அறிந்த பாஜக நிர்வாகிகள் அங்கு ஒன்றாக கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வேளையில் பாஜகவினர் ஜேசிபி வாகனத்தின் மீது கல் வீசினர். இதில் ஜேசிபியின் கண்ணாடி சேதமடைந்தது. இதையடுத்து பாஜகவினர் மீது கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு பாஜகவின் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை உடைத்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்ககோரி அமர்பிரசாத் ரெட்டி சார்பில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 30ம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அதன்பிறகு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அவரது ஜாமீன் மனு மீது செங்கல்பட்டு நீதிமன்றம் மீண்டும் விசாரணையை தொடங்கியது. அப்போது அமர்பிரசாத் ரெட்டி சார்பில் வழக்கறிஞர்கள், ‛‛இந்த வழக்கு என்பது 2 அல்லது 3 நாட்களில் பிணை தரக்கூடிய குற்றம் தான். அதோடு ஏராளமானவர்கள் கூடியிருந்த இடத்தில் அமர்பிரசாத் ரெட்டி தான் கல்லை வீசினாரா என்ற கேள்வி எழுகிறது.
தற்போது அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இந்த வாதத்தை கேட்ட நீதிமன்ற நீதிபதி அதனை ஏற்கவில்லை. இதையடுத்து அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications