22 ஆண்டுகளாக இயங்கி வந்த செங்கல்பட்டு சிறப்பு முகாம் மூடப்பட்டது
சென்னை: செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமை தமிழக அரசு மூடியுள்ளது. அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தோரில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் செய்யாறு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தமிழக அரசின் சிறப்பு அகதிகள் முகாம் செயல்பட்டு வந்தது. இதில் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் வந்த வெளி நாட்டினர் மற்றும் கடத்தல் வழக்கில் சிக்கிய இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு இருந்தனர்.
இங்கு 7 நைஜீரியர்கள் உள்பட 41 பேர் அடைக்கப்பட்டு முகாமில் இருந்தனர். விசாரணை கைதிகளாக இருந்து வந்த இலங்கை தமிழர்கள் தங்களை விடுவிக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் புதியதாக சிறப்பு முகாம் கட்டப்பட்டது. இது செயல்பாட்டுக்கு வந்ததால் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகள் செய்யாறு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
மொத்தம் உள்ள 41 கைதிகளில் 30 பேர் செய்யாறு முகாமுக்கு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை தமிழர்களான விக்ரமசிங்கா, காந்தி மோகன், ராமச்சந்திரன், ராஜ்குமார், கதிரேசன், சசீதரன், ஜெயவர்தனா, ரவிச்சந்திரன், காளிதாஸ், நித்யானந்தன், தனசேகரன் ஆகிய 11 பேர் திறந்தவெளி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 நைஜிரியர்கள் இன்று விடுதலையாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து 1993-ம் ஆண்டு முதல் 22 ஆண்டுகளாக இயங்கி வந்த சிறப்பு முகாம் மூடப்பட்டது. இதனை மீண்டும் மாவட்ட சிறைச்சாலையாக மாற்ற திட்டமிட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications