ஓட்டை உடைசல் ஈயம் பித்தளைக்கு சென்னை “ஏர்போர்ட்” - 45வது முறையாக "டமால்"!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 45வது முறையாக நேற்று பிற்பகலில் கண்ணாடி கதவு உடைந்து விழுந்து நொறுங்கியது. இதில், விமான நிலைய ஒப்பந்த ஊழியர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் விமான ஊழியர்கள், பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையம் ரூபாய் 2015 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீன முறையில் கட்டப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இதன் திறப்பு விழா நடந்தது. ஆனாலும், 2013 ஏப்ரலில் உள்நாட்டு முனையமும், அதே ஆண்டு செப்டம்பரில் சர்வதேச முனையத்தின் புறப்பாடு பகுதியும் செயல்பாட்டுக்கு வந்தன. சர்வதேச முனையத்தில் வருகை பகுதி இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
கடந்த 2 ஆண்டுகளில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் மாறி, மாறி தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகின்றன. கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள், மேற்கூரைகள், சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள சலவை கற்கள் பெயர்ந்து விழுவது போன்ற தொடர் விபத்துக்கள் நிகழ்கின்றன.
இதுவரையில், 44 முறை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் விமான நிலைய ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலைய மருத்துவமனை மற்றும் உணவு விடுதி ஊழியர் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், 45வது முறையாக நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு விபத்து நடந்தது. உள்நாட்டு முனையத்தில் பயணிகள் வருகை பகுதியில் இரண்டாவது வாசல் அருகே பயணிகள் பயன்படுத்தும் டிராலிகளை தள்ளி செல்வதற்காக தனி வாசல் ஒன்று உள்ளது. அந்த வாசலில் அமைக்கப்பட்டிருந்த 6 அடி உயரம், 4 அடி அகலம் உடைய கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது.
அந்த நேரத்தில், அந்த வழியாக சென்று கொண்டிருந்த விமான நிலைய ஒப்பந்த பணியாளர் முருகன் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, காயம் அடைந்த ஊழியருக்கு விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவல்அறிந்து, விமான நிலைய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து எப்படி நடந்தது என விசாரித்தனர். நொறுங்கிய கண்ணாடி இடிபாடுகளை விமான நிலைய ஊழியர்களை வைத்து அவசர, அவசரமாக அகற்றினர்.
கொஞ்ச நாட்களாக எந்த விபத்தும் இல்லையே என்று பயணிகள் ஆசுவாசப்பட்ட நிலையில் இந்த விபத்து நடைபெற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.