சென்னை ஏர்போர்ட்-சின்னமலை இடையே இம்மாத இறுதியில் மெட்ரோ ரயில் சேவை
சென்னை: சென்னை விமானநிலையம்-சின்னமலை இடையே இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் முதல் கட்டமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி 2-வது வழித்தடத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
தற்போது முதல் வழித்தடத்தில் விமான நிலையம்-சின்னமலை இடையே பறக்கும் ரயில் பாதையில் மெட்டோ ரயில் இயக்குவதற்காக அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளதால், இம்மாத இறுதியில் மெட்டோ ரயில் சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: விமானநிலையம்- சின்னமலை இடையே சுமார் 9 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் நாயக் குழுவினருடன் கடந்த மாதம் 29 மற்றும் 30-ந் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, பிரமாண்டமான முறையில் கத்திப்பாரா மேம்பாலத்திற்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 'ஹேண்டி லிவர்' உயர்பாலத்திலும், கிண்டியில் மின்சார ரயில் பாதையை கடந்து செல்லும் ராட்சத இரும்பு பாலத்தையும் ஆய்வு செய்தார். பெரும்பாலான பணிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தார்.
அதேநேரம், ரெயில் தண்டவாளங்கள், வழித்தட வரைபடம், கட்டிடங்கள், சிக்னல்கள், பயணிகளுக்கான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், உள்ளிட்டவற்றில் இருந்த தவறுகள் கடந்த 15-நாட்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
இந்தப்பாதையில் மேலும் கூடுதலான பாதுகாப்புடன் ரயில்களை இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஆணையரும் பயணிகள் பயணம் செய்யும் ரயிலை இந்தப்பாதையில் இயக்கலாம் என்று கூறி சான்றிதழை வழங்கி உள்ளார். மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் அறிக்கையை அனுப்பி உள்ளார். எனவே மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலை பெற்று இம்மாத இறுதியில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து ஆலந்தூர்- பரங்கிமலை பறக்கும் பாதையில் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்தப்பாதையில் வரும் அக்டோபர் மாதம் ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.
இதேபோல கோயம்பேடு - திருமங்கலம் பறக்கும்பாதை மற்றும் திருமங்கலம் - ஷெனாய் நகர் இடையே சுரங்கப்பாதையில் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. அந்தப்பாதையிலும் இரவு பகலாக சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஷெனாய் நகர் - நேருபூங்கா- எழும்பூர் இடையே பணிகள் இம்மாத இறுதியில் நிறைவடைய உள்ளது. இந்தப்பாதையிலும் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து முடிந்தவுடன் இந்த ஆண்டு இறுதியில் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது என்று கூறினார்.