சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயிலில் தீவிபத்து: தொழில் நுட்பக் கோளாறு காரணம்
சென்னை: கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருங்குடி அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு பெட்டியில் தீ பற்றியதால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் காயமின்றி தப்பினர். 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் சுமார் 2 மணிநேரம் ரயில்சேவை நிறுத்தப்பட்டு பின்னர் இயக்கப்பட்டது.
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி இன்று காலை 8.30 மணியளவில் ரயில் புறப்பட்டது. பெருங்குடி ரயில் நிலையம் அருகே வந்த போது எஞ்சினில் இருந்து 5வது பெட்டியில் திடீரென தீ பற்றியது. ஓடும் ரயிலில் தீ பற்றியதால் மளமளவென பரவியது. இதனையடுத்து பயணிகள் கூச்சலிடவே ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவர்கள் எரிந்து கொண்டிருந்த ரயில்பெட்டியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரம் போரடி பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் ஒரு பெட்டி முற்றிலும் எரிந்து நாசமானது.
தீ விபத்து ஏற்பட்ட உடனே அங்கு சென்ற ரயில்வே தொழிலாளி, ஒருவர் அங்கிருந்த பயணிகளை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.பெட்டி முழுவதும் புகை சூழ்ந்திருந்ததால், அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது
இன்று விடுமுறை நாள் என்பதால்,பயணிகள் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும்,இதில் எந்தப் பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெட்டி முழுவதுமாக எரிந்த நிலையில், அந்தப் பெட்டி ரயிலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. அதை குளிர்விக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ரயில் பெட்டியை குளிர்வித்த அதற்குள் சென்று விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தொழில் நுட்பக் கோளறு காரணம்
ஆய்வு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அனுபம்சர்மா, பறக்கும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்ட ரயில், 9 பெட்டிகளைக் கொண்டது. அதில் முன் மற்றும் பின்பகுதியில் தலா ஒரு என்ஜினும், மையப்பகுதியில் ஒரு என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும். இதில் மையப்பகுதியிலுள்ள எஞ்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து ரயில் ஓட்டுநர் பிரணாப்குமார் மற்றும் பாதுகாவலர் கத்தாவிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட உடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 10.30 மணிக்கு மேல் நிறுத்தப்பட்ட ரயில்சேவை மீண்டும் தொடங்கியது.