நாளை தொடங்குகிறது 40வது புத்தகக் கண்காட்சி… ரொக்கமில்லா விற்பனை சாத்தியமா?
40வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை சென்னையில் தொடங்குகிறது. லட்சக் கணக்கான வாசகர்கள் கூடும் கண்காட்சியை கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைக்கிறார்.
சென்னை: வாசகர்களின் திருவிழாவாக கருதப்படும் புத்தகக் கண்காட்சி நாளை சென்னை செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியில் தொடங்குகிறது. லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் சங்கமிக்கும் புத்தகக் காட்சிக்கான ஏற்பாடுகள் தீவரம் அடைந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழாவையொட்டி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் புத்தகக் கண்காட்சி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு 40வது புத்தக கண்காட்சி நாளை தொடங்கி 19ம் தேதி வரை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது.
700 அரங்குகள்
தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்கள் பங்கேற்கும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் இடம் பெறுகின்றன. அவற்றில் 350 தமிழ் புத்தக பதிப்பகங்களும், 153 ஆங்கிலப் புத்தக பதிப்பகங்களும் பங்கேற்கின்றன. 10 லட்சம் புதிய தலைப்புகள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளன.
ரொக்கமில்லா பரிவர்த்தனை
பணப் பிரச்னையை தவிர்க்கும் வகையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்த வசதியாக சிட்டி யூனியன் வங்கி உதவியுடன் 50க்கும் மேற்பட்ட ஸ்வைப்பிங் மிஷின்கள் கண்காட்சியில் பொருத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, புத்தகக் கண்காட்சி நடைபெறும் அரங்கில் ஏடிஎம் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. சாதாரண சிறிய பதிப்பாளர்கள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியில் ரொக்கமில்லா பரிவர்த்தனை எந்த அளவிற்கு சாத்தியம் என்பது கேள்விக் குறித்தான்.
மாணவர்களுக்கு..
புத்தகக் கண்காட்சியில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவரும் எம்ஜிஎம் டிஸ்ஸி வோர்ல்டு சென்று வருவதற்கான இலவச நுழைவு டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கண்காட்சியில் விலை கொடுத்து வாங்கப்படும் நுழைவுச் சீட்டுகள் மற்றும் விலையில்லா நுழைவுச் சீட்டுகளை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் எம்ஜிஎம் டிஸ்ஸி வோர்ல்டு நுழைவுக் கட்டணத்தில் 250 சலுகை வழங்கப்படும்.
ஆப்ஸ் அறிமுகம்
புத்தகக் கண்காட்சிக்கு வருவோர் நுழைவுச்சீட்டுகளை வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கு வசதியாக புதிய ஆப்ஸ் ஒன்றை பபாசி உருவாக்கியுள்ளது. இந்த ஆப்ஸ் மூலம் புத்தகக் கண்காட்சிக்கு வருவதற்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலம் எடுக்கலாம்.
சீசன் டிக்கெட்
கண்காட்சிக்குள் செல்ல நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தினம் வரும் வாசகர்களின் வசதிக்காக 50 மற்றும் 100 ரூபாய்க்கு சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. 50 ரூபாய் சீசன் டிக்கெட் பெறும் வாசகர்கள் கண்காட்சி முடியும் வரை தினமும் வந்து செல்லலாம். 100 ரூபாய் சீசன் டிக்கெட் பெறுவோர் 4 பேர் கொண்ட குழுவாக தினமும் வரலாம்.
தொடக்கவிழா
இந்தக் கண்காட்சியை மாநில கல்வி அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் நாளை மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார். நல்லிக் குப்புசாமி, திரைப்பட இயக்குநர் வசந்த், பபாசியின் தலைவர் காந்தி கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.