மவுலிவாக்கம் மீட்புப்பணிகள் நிறைவு: 61 பேர் பலி; 27 பேர் உயிருடன் மீட்பு
சென்னை: சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டிடம் விபத்துப் பகுதியில் கடந்த 7 நாட்களாக நடந்து வந்த மீட்புப் பணிகள் நிறைவு பெற்றன.
போரூர்-குன்றத்தூர் சாலையில் பிரைம் சிருஸ்டி என்ற நிறுவனத்தால் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி குடியிருப்பு கட்டிடம் சனிக்கிழமை மாலை திடீரென இடிந்து தரைமட்டமானது. அப்போது கட்டடத்தில் இருந்த சுமார் 100 தொழிலாளர்கள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனர்.

7 நாட்களாக மீட்புப் பணி
இவர்களை கடந்த 7 நாள்களாக தமிழக தீயணைப்புப் படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, தமிழக காவல்துறையின் கமோண்டோ வீரர்கள், மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஆகியோர் கொண்ட மீட்புக் குழு என மொத்தம் சுமார் 1,500 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

20 மோப்ப நாய்கள்
இடிபாடுகளிடையே சிக்கி இருப்பவர்களை கண்டறிய 20 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படுள்ளன. அதோடு நவீன கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.

27 பேர் உயிருடன், 61 பேர் சடலமாக மீட்பு
புதன்கிழமை வரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 50 சடலங்கள் மீட்கப்பட்டன. புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வியாழக்கிழமை காலை வரை 5 சடலங்களும், வியாழக்கிழமை காலை தொடங்கி மாலை வரை 6 சடலங்களும் மீட்கப்பட்டன.

10 தமிழர்கள்
இறந்தவர்களில் 41 பேர் ஆண்கள், 20 பெண்கள். இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 25 பேர் ஆந்திரத்தையும், 10 பேர் தமிழகத்தையும், 4 பேர் ஒடிஸாவையும் சேர்ந்தவர்கள்.
அடையாளம் காணப்படாமல் இருக்கும் சடலத்தை அடையாளம் காண வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கிருமிநாசினி தெளிப்பு
ஒவ்வொரு சடலமும் மீட்கப்படும்போது மீட்பு குழுவினர், அந்த சடலத்தின் மீது குளோரின் மற்றும் சுண்ணாம்பு கலந்த பவுடர் மற்றும் லேமன் கிராஸ் ஆயில் தெளித்து சம்பவ இடத்தில் இருந்து கறுப்பு நிற பையில் வைத்து, வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த இரண்டு நாள்களாக யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

அடித்தளத்தில் மீட்புப் பணி:
இடிபாடுகள் இரு பகுதிகளாக பிரித்து மீட்புப் பணி தொடங்கப்பட்டது. இதில் முதல் பிரிவில் மீட்புப் பணி வியாழக்கிழமை முதல் தளத்தையும், அடித்தளத்தையும் தொட்டது. இதேபோல இரண்டாவது பிரிவிலும் மீட்பு பணி முதல்தளத்தைத் தொட்டது. ஏழாவது நாளாக நடைபெற்ற மீட்புப் பணி, இன்று நிறைவுக் பகுதியை எட்டி உள்ளது.

கடும் துர்நாற்றம்
இடிபாடுகளிடையே சிக்கிக் கிடக்கும் சடலங்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதால், மீட்புக் குழுவினர் அனைவரும் முகமூடியுடனே அங்கு பணியில் ஈடுபட்டனர்.

கழிவுகள் அகற்றம்
இந்நிலையில், இன்று காலை முதல், கட்டிடம் இடிந்த இடத்தில் இருந்து கட்டிட கழிவுகளை அகற்றும் பணி மட்டுமே நடைபெற்று வந்தது.
"உயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலேயே மீட்புப் பணிகள் மெதுவாக நடத்தப்பட்டது என்று தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய அதிகாரி தெரிவித்தார்.

மீட்புப்பணியில் சவால்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை 7 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டது மிகப்பெரிய சவாலாக இருந்தது. 7 நாட்களில் 27 பேரை உயிருடன் மீட்டுள்ளோம்" என்றும் அவர் கூறினார்.

மோசமான கட்டிட விபத்து
மீட்புப் பணிகளை நிறைவு செய்யும் முன்னர் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோசனை மேற்கொண்டனர். தென்னிந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான கட்டிட விபத்து என்று மீட்புப்பணியில் கருத்து கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications