புற்று நோயாளிகளுக்காக முடிதானம் செய்த கல்லூரி மாணவிகள்!
சென்னை: வீணாய் வெட்டிப் போடும் தலைமுடியை புற்று நோயாளிகளுக்காக தானம் வழங்கியுள்ளனர் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள்.
இதுதொடர்பான விழிப்புணர்வு மற்றும் முடிதான நிகழ்ச்சியை சென்னை ரோட்டரி கிளப்பின் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி கிளை நடத்தியது.
சென்னை கல்லூரி சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் இந்த முடிதானம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு முடிதானம் அளித்தனர்.
இதில் கலந்து கொண்ட மாணவிகளிடமிருந்து பகுதி அளவிலான தலை முடி வெட்டி எடுத்து சேகரிக்கப்பட்டது.
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், வீணாக வெட்டி விரயம் செய்யும் தலைமுடி புற்று நோயாளிகளுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. எனவேதான் அனைவரும் முடிதானம் செய்ய வேண்டும் என்று பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நல்ல முயற்சிக்கு முன்னுதாரணமாக திகழும் வகையில் எங்களது முடியை இன்று தானமாக அளித்தோம். மிகப் பெரிய மன திருப்தியும் இதனால் எங்களுக்குக் கிடைத்தது என்றனர்.
எதற்காக இந்த முடிதானம்?
புற்று நோயாளிகளுக்கு எதற்காக இந்த முடிதானம் என்பது பலருக்குத் தெரியாமல் உள்ளது. அதுதொடர்பான விளக்கம் இது.
புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ தெரப்பி கொடுக்கப்படும். இந்த தெரப்பியின்போது முடி உதிர்ந்து விடும். மீண்டும் வளராது. மொட்டைத் தலையுடன்தான் இருக்க வேண்டும். இதனால் இவர்கள் விக் வைத்துக் கொண்டு வெளியில் நடமாடுகிறார்கள். விக் விலை அதிகம். எல்லோராலும் வாங்க முடியாத நிலை உள்ளது. ஒரு விக்கின் விலை ரூ. 20 ஆயிரம் வரை இருக்கும். எனவே முடியை தானமாக பெற்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விக் தயாரித்து வழங்குகின்றன. இதற்குத்தான் முடி தானமாக பெறப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே போல இக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியின்போது 2500 மாணவிகள் முடியைத் தானமாக கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. மொத்தமாக 50 கிலோ முடி பெறப்பட்டது. இதில் 200 விக்குகள் தயாரிக்கப்பட்டன. இதற்குத் தேவையான ரூ. 12 லட்சத்தையும் இந்தக் கல்லூரி மாணவிகளே வசூலித்துக் கொடுத்தனர்.
இந்த ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவிகள் முடி தானம் செய்தனர். முழு முடியும் தானமாக பெறப்படுவதில்லை. சில அங்குலம் அளவிலான முடியே வெட்டி எடுக்கப்படும். ஒரு மாணவி கடந்த ஆண்டு 16 அங்குல முடியை தானமாக கொடுத்தாராம். இந்த ஆண்டும் அவர் தானமாக கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு சுமையா என்ற ஒரு முஸ்லீம் பெண் தனது வீட்டுக்குக் கூட தெரிவிக்காமல் முடி தானம் செய்துள்ளார். பின்னர் வீட்டில் காரணத்தைக் கூறியபோது அவர்கள் நெகிழ்ந்து போனார்களாம். ஆனால் அடுத்த வருடம் இவருக்குத் திருமணம் நடைபெறவுள்ளதால் இந்த ஆண்டு முடிதானம் செய்ய முடியாமல் போய் விட்டதாக வருத்தத்துடன் கூறினார்.