முகத்தில் வர்ணம் பூசி.. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்து சொன்ன கல்லூரி மாணவிகள்
சென்னை: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை அண்ணா நகர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் இந்திய வரைபடம் மற்றும் ஒலிம்பிக் சின்னத்தை முகத்தில் வரைந்து வாழ்த்து தெரிவித்தனர்.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நாளை முதல் 21ம் தேதி வரை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 207 நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான துவக்க விழா பாரம்பரிய மரக்கானா மைதானத்தில் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 6, அதிகாலை 4.30 மணியளவில் துவங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்காக மாற்றியமைக்கப்பட்ட இம் மைதானத்தில் சுமார் 78,000 பேர் உட்கார்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாளை துவங்கும் 31வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 121 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் விளையாடுகின்றனர். தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்து திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை அண்ணா நகர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் இந்திய வரைபடம் மற்றும் ஒலிம்பிக் சின்னத்தை முகத்தில் வரைந்து வாழ்த்து தெரிவித்தனர்.