கம்ப்யூட்டர் கோளாறால் போலீஸ்காரர்களின் வங்கிக் கணக்கில் ஏறிய ‘லட்சங்கள்’... சென்னையில் பரபரப்பு
சென்னை: வங்கி ஒன்றின் கம்யூட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரின் கணக்கிலும் லட்சக்கணக்கில் பணம் ஏறியதாக செல்போனிற்கு வந்த குறுந்தகவலால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் குறிப்பிட்ட சிலரின் செல்போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் அவர்களது வங்கிக் கணக்கில் சில லட்சங்கள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. காரணமில்லாமல் வங்கிக் கணக்கில் பணம் ஏறியதால் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர்.
இவ்வாறு குறுந்தகவல் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் காவலர்கள். உடனடியாக இது தொடர்பாக தனது சக ஊழியர்களிடம் செல்போனில் அவர்கள் விசாரித்துள்ளனர். தங்களுக்கும் அதுபோன்ற தகவல் வந்ததாக அவர்களும் கூறவே, அரசு ஏதேனும் போனஸ் போன்று போட்டுள்ளதோ என அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
சிலர் ஏடிஎம்மிற்கு சென்று கணக்கில் பணம் ஏறியது உண்மையா எனச் சோதித்துள்ளனர். அப்போது அவர்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் மேலும் குழப்பத்தில் ஆழ்ந்த காவலர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அதன் பின்னர் இக்குழப்பங்களுக்கு சரியான விடை கிடைத்தது.
இதோ அதன் விபரமாவது:-

எஸ்.எம்.எஸ் வசதி...
குழப்பத்திற்கு ஆளானவர்கள் அனைவரும் சென்னை பார்க் டவுன் அருகே உள்ள வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருப்பவர்கள். உலகமெங்கும் அதிக கிளைகளை உடைய அந்த வங்கியில் பணம் போட்டாலும், எடுத்தாலும் குறுந்தகவல் மூலம் வாடிக்கையாளருக்கு தகவல் வந்து விடும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் கோளாறு...
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று அந்த வங்கியின் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாடிக்கையாளர்கள் அனைவரின் கணக்கிற்கும் ஆயிரங்கள் முதல் லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகள் முடக்கம்...
இந்தத் தவறு நிகழ்ந்த 3 நிமிடங்களுக்குள் சுதாரித்துக் கொண்ட வங்கி நிர்வாகம் உடனடியாக அனைத்து வாடிக்கையாளரின் கணக்குகளையும் முடக்கி, தவறை சரி செய்து விட்டது.

திருப்பித் தந்துடுங்க...
ஆனால், குறுந்தகவல் கிடைத்த சில வினாடிகளிலேயே சில கில்லாடி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் சென்று குறிப்பிட்ட பணத்தை எடுத்து விட்டனராம். எனவே, அவர்களுக்கு வங்கி மூலம் எடுத்த பணத்தைத் திரும்ப ஒப்படைக்குமாறு தகவல் அனுப்பப் பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications