சபாஷ் சென்னை மாநகராட்சி.. 10ம் வகுப்பு தேர்வில் 95% தேர்ச்சி பெற்று கலக்கிய மாணவ மணிகள்!
சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவியரில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து அசத்தியுள்ளனர். அவர்களுக்கு மேயர் சைதை துரைசாமி நேரில் அழைத்து பாராட்டி பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.
சென்னை மாநகராட்சி அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் பி.சந்திரமோகன் விழாவுக்கு முன்னிலை வகித்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மேயரும், கமிஷனரும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

மாணவ-மாணவிகளின் சாதனைகள் குறித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:
- பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 70 சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
- இதில் 3,029 மாணவர்கள், 3,579 மாணவிகள் என மொத்தம் 6,608 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள்.
- அதில், 2,803, 3,470 மாணவிகள் என மொத்தம் 6,273 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- இந்த வருட தேர்ச்சி விகிதம் 95 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 3 சதவீதம் அதிகமாகும்.
- சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் எஸ்.புவனேஸ்வரி, எம்.இ.அனிதா ஆகியோர் 492 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளனர்.
- கோயம்பேடு சென்னை மேல்நிலைப்பள்ளியின் எம்.ஜெயப்பிரியா, சைதாப்பேட்டை மல்வின் ரோஷன் தலா 489 மதிப்பெண்கள் பெற்று 2வது இடம் பெற்றுள்ளனர்.
- பெரம்பூர் மார்க்கெட் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்தியா 488 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பெற்றுள்ளார்.
- பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவிகளில் 56 பேர் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
- 15 பேர் கணிதத்திலும், 7 பேர் அறிவியல் பாடத்திலும் என மொத்தம் 78 மாணவ-மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- 1149 மாணவ-மாணவிகள் 400-க்கு அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
- 250 மாணவ-மாணவிகள் 450-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளிகளில் 19 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
- இந்த பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ள 48 வகையான திட்டங்கள் மற்றும் சலுகைகள் காரணமாக சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications