சென்னையில் டாக்டர் கொலை- சொத்து, நகைகளுக்காக கொலை செய்த டிரைவர்!
சென்னை: சென்னையில் சொத்துப்பத்திரம் மற்றும் நகைகளுக்காக டாக்டரை கார் டிரைவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியில் வசித்தவர் டாக்டர் மல்லிகா. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மத்திய அரசு ஆஸ்பத்திரியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
இரண்டு மகள்கள்:
இரண்டாவது மகள் ரோகிணி பிரியாவுடன் முகப்பேரில் வசித்து வந்தார். ரோகிணி பிரியா சென்னையில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிகிறார். மூத்த மகள் ஹரிணி அமெரிக்காவில் இருக்கிறார்
நிலம் விற்பனை:
மல்லிகாவுக்கு சொந்தமான நிலம் திருப்போரூர் பகுதியில் உள்ளது. அதனை விற்க திட்டமிட்டு இருந்தார். இதற்காக ஒரு நபரை சந்தித்து பேச முடிவு செய்து இருந்தார்.
வெளியே சென்ற டாக்டர்:
கடந்த 12 ஆம் தேதி காலை தனது காரில் நிலம் விற்பனை தொடர்பாக அந்த நபரை சந்தித்து பேச புறப்பட்டார். அவருடன் வேலைக்காரி சத்யாவும் சென்றார். காரை தற்காலிக டிரைவர் கார்த்தி ஓட்டினார்.
செல்போன் "சுவிட்ச் ஆப்":
மாலை 4 மணி வரை மல்லிகா தனது மகளுடன் இடை இடையே பேசிக் கொண்டு இருந்தார். அதன் பிறகு மல்லிகாவின் செல்போனுக்கு ரோகிணி பிரியா தொடர்பு கொண்ட போது "சுவிட்ச் ஆப்" ஆகி விட்டது. இரவு வெகு நேரம் ஆகியும் மல்லிகா வீடு திரும்பவில்லை.
போலீசில் புகார்:
இதனால் பயத்திற்கு உள்ளாகிய ரோகிணிபிரியா தாயாரை காணவில்லை என்று நொளம்பூர் போலீசில் புகார் செய்தார்.இந்த நிலையில் திண்டிவனம் அருகே மைலம் காட்டுப் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நொளம்பூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
டாக்டரின் பிணம்:
மைலம் போலீசார் பிணமாக கிடந்த பெண்ணின் போட்டோவை நொளம்பூர் போலீசுக்கு அனுப்பி வைத்தனர். அதைப் பார்த்ததும் பிணமாக கிடந்தது டாக்டர் மல்லிகாதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மகள் ரோகிணியும் அடையாளம் காட்டினார்.
நகைகள், கார் மாயம்:
மல்லிகா காரில் சென்ற போது ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள தங்க செயின், வளையல்கள் அணிந்திருந்தார். கையில் பணப்பையும் வைத்திருந்தார். அவற்றை காணவில்லை.
காரும் மாயம்:
காரும் மாயமாகி விட்டது.எனவே மல்லிகாவை டிரைவர் கார்த்தி காரில் கடத்தி கொலை செய்து நகைகளை அபகரித்து தப்பிச் சென்று இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது.
கார்த்தி - சத்யாதான் குற்றவாளிகள்:
போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியதில் வேலைக்காரி சத்யாவும், கார்த்தியும்தான் குற்றவாளிகள் எனத் தெரிந்தது. இவர்களது கூட்டாளிகள் 3 பேரை பிடித்தனர். இவர்கள் சென்னையில் உள்ள ஒரு நகை அடகு நிறுவனத்தில் சில நகைகளை நேற்று முன்தினம் அடகு வைத்ததாக தெரிவித்தனர்.
குரூப்பாக கொள்ளை:
உடனே போலீசார் அங்கு சென்று நகைகளை பார்த்த போது அது கொலையுண்ட மல்லிகா அணிந்திருந்தது என்று தெரியவந்தது.இதன் மூலம் நகைக்காக மல்லிகாவை டிரைவர் கார்த்தியும், காதலி சத்யாவும் கடத்திச் சென்று கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.
போலீசாரின் தேடுதல் வேட்டை:
கொள்ளையடித்த நகைகளை 3 நண்பர்கள் மூலம் அடகு வைத்துள்ளனர்.தலைமறைவாக இருக்கும் கார்த்தி, சத்யாவை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும், மல்லிகாவின் சொத்துப் பத்திரத்திற்காகவும், நகைகளுக்காகவும்தான் அவர்கள் இந்தக் கொலையை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.