பெண்ணின் வயிற்றிலிருந்த 152 இரும்புப் பொருட்கள்... ஆபரேஷன் மூலம் அகற்றி சென்னை டாக்டர்கள் சாதனை
சென்னை: மனநல பாதிப்பால் கையில் கிடைத்த சிறிய இரும்புப் பொருட்களையெல்லாம் சாப்பிட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து சுமார் 152 இரும்புப் பொருட்களை வெளியே எடுத்து சென்னை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் லட்சுமி (35). பெற்றோருடன் வசித்து வந்த லட்சுமி மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனால், கையில் கிடைத்த சிறு பொருட்களையெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டு வந்துள்ளார்.
இதனால், உடல்நலம் பாதிப்படைந்த லட்சுமியை சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இரைப்பை சோதனை...
தொடர்ந்து மனநல பாதிப்பிற்கு சிகிச்சை அளித்தும் அது பலனளிக்காததால் அரசு பொது மருத்துவமனைக்கு லட்சுமி மாற்றப்பட்டார். அங்கு அவரது இரைப்பை மற்றும் குடல் போன்றவை சோதிக்கப் பட்டது.
இரும்புப் பொருட்கள்...
இரைப்பை, குடலியல் மருத்துவ துறை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர்கள் சந்திர மோகன், கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் செய்த பரிசோதனையில் லட்சுமியின் வயிற்றில் ஆங்காங்கே சிறிய இரும்புப் பொருட்கள் சொருகி இருப்பது கண்டறியப்பட்டது.
அறுவைச் சிகிச்சை...
அவை கூர்மையாகவும், வெவ்வேறு இடங்களிலும் இருந்ததால் அறுவைச் சிகிச்சை மூலம் மட்டுமே எடுக்க முடியும் என மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் ரத்த சோகை நோய், மற்றும் ஊட்டச்சத்து குறைபாடால் லட்சுமி பாதிக்கப்பட்டு இருப்பதால் அறுவைச் சிகிச்சைக்கு அவரது உடல் நிலை தகுதியானதாக இல்லை. இதனால் தொடர்ந்து அவருக்கு அரசு மருத்துவமனையிலேயே ஊட்டச்சத்து பெறுவதற்கான கிச்சை அளிக்கப்பட்டது.
152 வகைஇரும்புப் பொருட்கள்....
அதன் பிறகு நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சையில், அவரது வயிற்றில் இருந்து 152 வகையான இரும்பு பொருட்கள் எடுக்கப்பட்டது. இவற்றின் மொத்த எடை 478 கிராம் ஆகும்.
ஆணி, காசு,பாசி மணி...
இதில் 96 சிறிய ஆணி, 23 பெரிய ஆணி, 17 கம்மல் தோடு, 3 உடைந்த வளையல் துண்டுகள், 2 காசுகள், 1 இரும்பு சங்கிலி, 1 பாசி மணி, 4 குண்டூசி, 1 கொண்டை ஊசி, 1 சாவி, மற்றும் காந்தம் பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.
ஆரோக்கியம்...
தற்போது குணம் அடைந்து உடல் நலம் தேறி பழைய நிலைக்கு வந்த லட்சுமியை அரசு ஆஸ்பத்திரி டீன் விமலா மற்றும் டாக்டர்கள் சந்திரமோகன், கண்ணன் குழுவினர் மீண்டும் பரிசோதனை செய்தனர். இதில் அவர் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது.
வித்தியாசமான அறுவைச்சிகிச்சை...
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘இது ஒரு வித்தியாசமான றுவைச் சிகிச்சை, இரும்பு பொருட்களால் இரைப்பைக்கு பாதிப்பு எற்படாமல் இருக்கவும், லட்சுமியின் உடல் ஆபரேஷனுக்கு ஏற்றதாக மாற்றவும் சிகிச்சை அளித்தோம். இதற்கு நீண்ட நாள் ஏற்பட்டது. லட்சுமி இது போன்ற பொருட்களை 4 வருடங்களாக சாப்பிட்டு வந்து இருக்கலாம் என்று கருதுகிறோம்.
இலவச சிகிச்சை...
தனியார் மருத்துவ மனையில் இந்த ஆபரேஷனுக்கு பல லட்சம் செலவாகும், ஆனால் அரசு ஆஸ்பத்திரியில்செலவு எதுவும் இன்றி மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.