வாக்களிக்க லீவு விடாத டிசிஎஸ், ஹெச்.சி.எல், விப்ரோ, டெக் மகேந்திரா மீது வழக்கு
சென்னை: சென்னையில், வாக்குப்பதிவு நாளன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத டிசிஎஸ், ஹெச்.சி.எல், விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட 10 ஐ.டி. நிறுவனங்கள் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

5 ஐடி நிறுவனங்கள்
இதற்கிடையே, சோழிங்கநல்லூர் மேடவாக்கம் இணைப்புச் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள ஹெச்.சி.எல், விப்ரோ, டெக் மகேந்திரா, வோல்டாஸ், சொடெக்ஸோ ஆகிய 5 நிறுவனங்கள் இயங்குவதாக தேர்தல் ஆணையத்துக்குப் புகார்கள் வந்தன.

அதிரடி சோதனை
அந்தப் புகாரின் அடிப்படையில் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் ஆர். ஜெயந்தி மற்றும் போலீஸார் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அந்த 5 நிறுவனங்கள் இயங்குவது தெரியவந்தது.

ஊழியர்கள் வெளியேற்றம்
இதனையடுத்து அங்கு பணிபுரிந்த சுமார் 4000 ஊழியர்களும் காவல்துறையினர் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். அந்த நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன.
மேலும் அடுத்த ஷிப்ட் பணிக்கு வந்த ஊழியர்களை, நிறுவனத்துக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அந்த நிறுவனத்தின் முன் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

போலீசில் புகார்
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக வட்டாட்சியர் ரவிச்சந்திரன், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் 5 நிறுவனங்கள் மீதும் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி செயல்பட்டதாக புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்த 5 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிசிஎஸ்
அதே போல சிறுசேரி மற்றும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள டிசிஎஸ் அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். இதையடுத்து இங்கு ரெய்ட் நடத்திய தொழிலாளர் துறை அதிகாரிகள் ஸ்பென்சர் பிளாசா அலுவலகத்தைப் பூட்டினர்.

வழக்குப் பதிவு
நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், தேர்தல் ஆணைய உத்தரவை மீறியதாக 10 ஐடி நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications