அதே பழைய ரயில்.. அதே பழைய மின்சார கம்பி.. இன்னும் எத்தனை உயிரை பறிக்கும் சென்னை மின்சார ரயில்
சென்னை மின்சார ரயில் போக்குவரத்தில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video
சென்னை: சென்னை மின்சார ரயில் போக்குவரத்தில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் மின்சார ரயில்வே போக்குவரத்து பல வருடமாக எந்த பராமரிப்பும் இன்றி இருக்கிறது. இன்று நிகழ்ந்திருக்கும் மரணம் புதியதல்ல, இதேபோல் பல நாட்களாக தொடர்ந்து ரயில்வே துறையின் அலட்சியத்தால் மக்கள் பலியாகி வருகிறார்கள்.
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் கூட்ட நெரிசல் ரயிலில் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் படிக்கட்டில் தொங்கிய பயணிகள் மின்சார கம்பி தாக்கி கீழே விழுந்துள்ளார். இதில் 7 பேர் காயம் அடைத்துள்ளனர். மின்கம்பி மோதி ரயிலில் தொங்கிய 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில் போக்குவரத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து மீண்டும் விவாதம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல நாட்கள்
சென்னையில் மின்சார ரயில் சேவை மிகவும் சிறப்பாக இயங்கி வந்தாலும், பல குறைப்பாடுகளும் இதில் அதிகம் இருக்கிறது. தற்போது சென்னை மின்சார ரயில் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும், உயர் அழுத்த மின்சார கம்பிகள் எல்லாமே மிகவும் பழைய கம்பிகள் ஆகும். இந்த கம்பிகள் பல வருடங்களாக மாற்றப்படவில்லை. பல நாட்களாக இது பராமரிப்பு கூட செய்யப்படவில்லை. அதில் ஒரு கம்பிதான் இன்று அறுந்து விழுந்துள்ளது.
மக்கள் அதிகம்
இந்த நிலையில்தான் சென்னையில் தாம்பரம், செங்கல்பட்டு போன்ற சில புறநகர் பகுதிகள் வரை மட்டுமே இயங்கி வந்த ரயில் சேவை காஞ்சிபுரம் வரை விரிவாக்கப்பட்டுள்ளது.அதேபோல் எதிர்புறத்தில் தடா, சூலூர்பேட்டை வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
சேவை
ஆனால் ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமானாலும், ரயில்வே போக்குவரத்தில் தூரம் அதிகரிக்கப்பட்டாலும் , ரயில்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்படவில்லை. இன்னும் பழைய ரயில்கள், அதே பழைய எண்ணிக்கையில்தான் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இருக்கின்ற ரயிலில் மக்கள் முண்டியடித்துக் கொண்டும் செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறத.
கூட்டம் மற்றும் பாதுகாப்பு
காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த மின்சார ரயிலில் மக்கள் மிகவும் அதிக அளவில் பயணிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அதே அளவிற்குத்தான் ரயில் போக்குவரத்து விடப்படுகிறது. மேலும் இது போன்ற நேரத்தில், பெண் பயணிகளுக்கு கொஞ்சம் கூட பாதுகாப்பு இருப்பதில்லை. சுவாதி படுகொலைக்கு பின்பு கூட இன்னும் பல ரயில்நிலையத்தில் கேமரா வைக்கப்படவில்லை.
தடுப்பு சுவர் பிரச்சனை
இத்தனை பிரச்சனைக்கும் மத்தியில்தான், சென்னையில் மின்சார ரயிலுக்கு அருகில், தடுப்பு சுவர் அதிக அளவில் வைக்கப்பட்டு இருக்கிறது. இது ரயிலுக்கு மிகவும் அருகில் வைக்கப்பட்டு இருக்கிறது. கொஞ்சம் அதிக கூட்டம் ஆகி, மக்கள் தொங்கும் நிலை ஏற்பட்டால், இந்த தடுப்பு சுவரில் இடித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக இதற்கு முன்பே பலமுறை சிலர் பலியாகி உள்ளனர்.
ரயில்வே கிராஸிங்
அதேபோல் சென்னையில் எல்லா, மின்சார ரயில் கிராசிங்கும் சிறப்பாக இயங்கினால், வீடுகளுக்கு இடையே ரயில்வே போக்குவரத்து செல்வதால், பல இடங்களில் மக்கள் ரயில் செல்லும் போதே, பாதுகாப்பு இன்றி கடந்து செல்கிறார்கள். அதேபோல் சைக்கிள், பைக்கை கூட அதில் ஏற்றி செல்லும் நிலையும் இருந்து வருகிறது. ஆனால் ரயில்வே நிர்வாகம் இதுவரை இதை எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.