சென்னை வெள்ளத்தில் தப்பிய எஞ்சினியர் மனைவியுடன் சொந்த ஊர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பலி!
அரக்கோணம்: சென்னை வெள்ளத்திற்கு பயந்து தக்கோலத்திற்கு விரைந்த எஞ்சினியர் ஒருவர் அங்கு ஆற்று வெள்ளத்தில் சிக்கி மனைவியுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பழனி மகன் சீனிவாசன். அவரது மனைவி பவித்ரா என்கிற யசோதா. இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது.சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் எஞ்சினியராக பணி புரிந்து வந்தார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான குடியிருப்புகள், வீடுகள், சாலைகள் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சீனிவாசன் வசித்த பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளம் வடியும் வரை சில நாட்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புரிசை பகுதியில் வசிக்கும் பவித்ராவின் தாயார் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார்.
நேற்று காலை சென்னையில் இருந்து பஸ்சில் புறப்பட்டு அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் வந்தனர். புரிசைக்கு செல்ல அந்த பகுதியில் செல்லும் ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். சீனிவாசனும், பவித்ராவும் ஆற்றை கடந்து செல்ல முயன்றனர். பாதி தூரம் சென்றபோது, வெள்ளம் அவர்கள் இருவரையும் அடித்து சென்றது.
உடனே இருவரும் அலறி கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் சென்றதால் கணவன், மனைவி இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர தேடுதலுக்கு பின்னர் கணவன், மனைவி இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications