வடபழனி தீவிபத்து.. நான்கு பேரின் உயிரைப் பறித்த மின்சார வயர்...!
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்சார வயர் கோளாறே காரணம் என்று தெரியவந்துள்ளது.
சென்னை: சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 5 பேருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய தெற்கு பெருமாள் வீதியில் இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 அடுக்குமாடிகளை கொண்ட வீட்டில் மொத்தமாக 20க்கும் மேற்பட்ட குடியிருப்பார்கள் உள்ளனர். புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மின்சார வயரில் கோளாறு
அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்த மின்பெட்டியில் வயரில் ஏற்பட்ட கோளாறுதான் இந்த தீ விபத்துக்குக் காரணம் என்று மின் வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கீழ்பாக்கம் மருத்துவமனை
புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்ட மேலும் 5 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீக்காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படும் என்று ஆட்சியர் கூறியுள்ளார். இந்த கட்டிடத்தின் படிகள் மிகவும் குறுகலாக உள்ளதால் குடியிருப்பாளர்கள் வெளியே வர முடியாமல், அருகாமையில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளின் மேல்தளத்தில் குதித்து அந்த குடியிருப்பின் வாசல் வழியாக தான் வெளியே வந்திருக்கிறார்கள்.
ராதாகிருஷ்ணன் ஆய்வு
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ காயம் ஏற்பட்டவர்களுக்கும், புகையால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று ஏற்படும் என்பதால் யாரையும் அனுமதிக்கவில்லை என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications