வாழ்க்கையை புரட்டிப்போட்ட வெள்ளம்: பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்...
சென்னை: மழை வெள்ளத்தில் பெற்றோர்களை பிரிந்து தவித்து வருகின்றனர் இரண்டு பிஞ்சு குழந்தைகள். வடபழனி காவல் நிலையத்தில் தங்கியுள்ள ஒரு குழந்தையை அடையாளம் கூறி அழைத்து போகலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த திங்கட்கிழமையன்று பெய்த மழையால் அடையாறு, கூவம் ஆறுகளில் பெருகிய வெள்ளம் சென்னை நகரை சூழ்ந்தது. இதில் ஆற்றங்கரையோரம் உள்ள சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஈக்காட்டுத்தாங்கல், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அசோக்நகர், கே.கே.நகர் பகுதிகளில் வெள்ள நீர் ஆறாக ஓடியது.
உயிர் பிழைத்தால் போதும் என்று ஏராளமானோர் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். இதில் முதியவர்களை அழைத்துச் செல்ல முடியாதவர்கள் அப்படியே வீட்டிற்குள் விட்டு விட்டு போய்விட்டனர்.
குழந்தைகள் சிலர் பெற்றோரை விட்டு பிரிந்து விட்டனர்.
வடபழனியில் உள்ள காவல் நிலையத்தில் கையில் பால் பாட்டிலுடன் தவித்து வருகிறாள் இந்த குழந்தை. தவறவிட்ட பெற்றோர் உடனடியாக வந்து அழைத்துச் செல்லலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரை பிரிந்தது கூட தெரியாமல் புன்னகையுடன் இருக்கும் இந்த குழந்தையும் பெற்றோரை விட்டு பிரிந்து விட்டது. இந்த தகவலும் வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டு வருகிறது.
மழை வெள்ளம் சென்னை மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. லட்சக்கணக்கான மக்களின் உடமைகள், விலை உயர்ந்த பொருட்களும் வெள்ளத்தோடு போய்விட்டன. வெள்ளம் வந்த போது வீடுகளை விட்டு வெளியேறி ஓடியவர்கள் போட்டது போட்டபடி தப்பிப் பிழைத்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த குழந்தைகளின் பெற்றோர் எங்கு இருக்கிறார்களோ? தெரிந்தவர்கள் தகவல் தெரிவியுங்கள்... சமுக வலைத்தளங்களில் அதிகமாக பகிருங்கள்.
இதேபோல ஒன்றரை வயது ஆண்குழந்தை பெற்றோர்களை பிரிந்து தவித்து வருகிறது. வடபழனி பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த குழந்தையை வைத்துள்ளவர்கள் வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். குழந்தையின் பெற்றோர்களோ, உறவினர்களோ 044- 23452635 என்ற தொலைபேசி எண்ணிலும், 9094307234 என்ற செல்போனிலும் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல மகாபலிபுரம் கடற்கரையில் பெற்றோர்களை தவறவிட்டு தவிக்கிறது இந்த குழந்தை இந்தக்குழந்தையை பெற்றோருடன் சேர்க்க அதிகம் சேர் செய்யுங்கள்.